இன மத வேறுபாடு இன்றி அனைவரும் கொரோனா தொற்றில் இருந்து விடுபட வேண்டும் - யாழில் சிறப்பு பூஜை வழிபாட்டில் ஈடுபட்ட ஞானசார தேரர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 14, 2021

இன மத வேறுபாடு இன்றி அனைவரும் கொரோனா தொற்றில் இருந்து விடுபட வேண்டும் - யாழில் சிறப்பு பூஜை வழிபாட்டில் ஈடுபட்ட ஞானசார தேரர்

இன மத வேறுபாடு இன்றி அனைவரும் கொரோனா தொற்றில் இருந்து விடுபட வேண்டியே யாழ்ப்பாணத்தில் சிறப்பு பூஜை வழிபாட்டினை மேற்கொண்டதாக வண. கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் நாட்டில் நாடு கொரோனா தொற்றில் இருந்து விடுபட வேண்டி இடம் பெற்ற விசேட பூசை வழிபாடுகளின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்றைய தினம் யாழ் மாவட்டத்தில் ஒரு விசேட பூசை வழிபாட்டில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கின்றோம். யாழ்ப்பாணத்தில் உள்ள சிறப்பான விஷ்ணு ஆலயத்தினை தெரிவு செய்து நயீனாதீவு விகாராதிபதி மற்றும் யாழ்ப்பாண நாக விகாரை விகாராதிபதியுடன் இணைந்து வந்திருக்கின்றேன்.

நாங்கள் ஒரு எதிர்பார்ப்போடு இங்கு வந்திருக்கின்றோம். தற்போதைய நிலைமை அனைவருக்கும் தெரிந்த விடயம். இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தின் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

சிலர் நோயினால் பாதிக்கப்பட்டு கஷ்டப்படுகிறார்கள். அது சிங்களவராக இருக்கட்டும், தமிழராய் இருக்கட்டும், எந்த இனத்தவராயினும் அனைத்து இனத்தை சேர்ந்தவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

சிலர் ஒரு நேர உணவுக்கு கூட வழியில்லாமல் உள்ளார்கள். அதேபோல் சிலருக்கு வேலை இல்லாத பிரச்சனை காணப்படுகின்றது. அத்தோடு இந்த நோய் தொற்றுக்கு உள்ளானோர் சிகிச்சை பெறுவதற்கு அவதிப்படுகிறார்கள். எந்த இனத்தவராக இருந்தாலும் பிரச்சனையில்லை. அனைத்து இன மக்களும் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

கடவுள் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக குறிப்பாக பௌத்த மதத்தில் நாம் பின்பற்றும் ஒரு விதிமுறையை போல இந்து மதத்தில் உள்ள ஆகம விதிமுறையை இணைத்து இந்த தொற்றில் இருந்து நாடு விடுபட கடவுளிடம் வேண்டி ஒரு விசேட பிரார்த்தனை மேற்கொண்டுள்ளோம்.

தற்பொழுது பௌத்த, இந்து, இஸ்லாம் என்ற பேதத்தை மறந்து அனைவரும் இணைந்து இந்த கொரோனா நோயிலிருந்து விடுபடுவதற்காக ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.

இலங்கையில் நான்கு பிரதான விஷ்ணு ஆலயங்கள் காணப்படுகின்றன. அதில் ஒன்றான யாழ்ப்பாணம் பொன்னாலை வரதராஜ பெருமாள் விஷ்ணு ஆலயத்தில் இந்த விசேட பூஜை வழிபாட்டை மேற்கொண்டுள்ளோம். கடவுளிடம் மன்றாடி இந்த விஷேட பூசை வழிபாடு மேற்கொண்டுள்ளோம்.

ஏனைய இடங்களிலும் இந்த பூசை வழிபாடுகள் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு என்னுடன் இணைந்து ஏனைய விகாராதிபதிகளும் இந்த நிகழ்வில் இணைந்திருந்தார்கள்.

இந்த கொரோனா நோயின் தாக்கமானது கல்வி சுகாதாரம் பொருளாதாரம் ஆகிய அனைத்து விடயங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது இலங்கையில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிலிருந்து விடுபடுவதற்கு நாம் ஒரு முயற்சியாகவே அதாவது உலகத்தில் உள்ள மக்கள் இந்த நோயிலிருந்து விடுபட வேண்டும். மக்கள் துன்பத்தில் இருந்து விடுபட வேண்டியே இந்த விஷேட பூசை வழிபாட்டினை ஏற்பாடு செய்துள்ளோம்.

அரசியல் இன மத வேறுபாடு இன்றி அனைத்து மக்களும் நோயிலிருந்து விடுபட வேண்டியே இன்றைய தினம் இந்த வழிபாட்டினை மேற்கொண்டுள்ளோம். குறித்த வழிபாட்டின் மூலம் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment