கிழக்கு மாகாணத்தில் மரணங்களின் எண்ணிக்கை 750 ஐ தாண்டியுள்ளது. இதுவரை 751 மரணங்கள் சம்பவித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இதுவரை திருமலை மாவட்டத்தில் 263 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 251 பேரும், கல்முனையில் 148 பேரும், அம்பாறையில் 89 பேரும் மரணித்துள்ளனர்.
வழமைக்குமாறாக கடந்த மாதத்தில் தொற்றுகளும் மரணங்களும் நான்கு மடங்காக அதிகரித்துக் காணப்பட்டன. நேற்று வரை 44435 தொற்றுக்களும், 751 மரணங்களும் நிகழ்ந்துள்ளன.
தற்போது வழங்கப்படும் தடுப்பூசியின் பின்னர் இத்தொகை குறையலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கில் ஆபத்து நிறைந்த பகுதிகளாக தெஹியத்தகண்டிய, களுவாஞ்சிக்குடி, உஹன, அம்பாறை, மட்டக்களப்பு, தமன, மகாஓயா ஆகிய பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 468 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளார்கள். 10 மரணங்கள் சம்பவித்துள்ளன.
கிழக்கில் முதலாவது தடுப்பூசிகள் 909,520 கிடைத்தன. அதில் 833,500 ஏற்றப்பட்டன. அதாவது 84 வீதமானவர்களுக்கு ஏற்றப்பட்டன.
அதில் கூடுதலாக கல்முனை, மட்டக்களப்பு சுகாதாரப் பிரிவுகளில் 94 வீதமானவர்களுக்கும், திருமலையில் 81 வீதமானவர்களுக்கும், அம்பாறையில் 60 வீதமானவர்களுக்கும் முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டன.
இரண்டாவது தடுப்பூசிகள் 639, 600 கிடைத்தன. அதில் நேற்று வரை 49 வீதமானவர்களுக்கு ஏற்றப்பட்டுள்ளன. அடுத்த வாரமளவில் இரண்டாம் கட்ட இரண்டாவது தடுப்பூசிகள் ஏற்றப்படும் என்றார்.
(காரைதீவு குறூப் நிருபர்)
No comments:
Post a Comment