இஸ்ரேலிய சிறையில் இருந்து தப்பிய 6 பலஸ்தீனர்கள் - துருப்பிடித்த கரண்டியினால் கழிப்பிடத்தில் சுரங்கம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 7, 2021

இஸ்ரேலிய சிறையில் இருந்து தப்பிய 6 பலஸ்தீனர்கள் - துருப்பிடித்த கரண்டியினால் கழிப்பிடத்தில் சுரங்கம்

இஸ்ரேலில் உள்ள சிறை ஒன்றில் இருந்து சுரங்கம் தோண்டி ஆறு பலஸ்தீனர்கள் இரவோடு இரவாக தப்பியுள்ளனர். தப்பியோடிய ஆறு சிறைக் கைதிகளையும் இஸ்ரேலிய அதிகாரிகள் தற்பொழுது தேடிக் கொண்டிருக்கின்றனர்.

கில்போ சிறைச்சாலையில் தாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறை அறையின் கழிப்பிடத்தில் இருந்து சிறையின் சுற்றுச் சுவருக்கு வெளியே உள்ள சாலை வரை நிலத்துக்கு அடியில் சுரங்கம் தோண்டிய அந்தச் சிறைக் கைதிகள் அதன் வழியாகத் தப்பியோடி உள்ளதாக கருதப்படுகிறது.

தங்கள் வயல்கள் வழியாக சிறைக் கைதிகள் தப்பி ஓடுவதைப் பார்த்த விவசாயிகள் இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த பின் தேடுதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

இவர்களில் ஐந்து பேர் 'இஸ்லாமிக் ஜிகாத்' எனும் அமைப்பின் உறுப்பினர்கள்; ஒருவர் அல்-அக்சா தியாகிகள் படை எனும் தீவிரவாதக் குழுவின் முன்னாள் தலைவர்.

இந்த ஆறு பேரும் சிறையில் இருந்து தப்பியது இஸ்ரேலின் மிகப்பெரிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தோல்வி என்று கூறப்படுவதை இஸ்ரேலிய சிறைத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். 
துருப்பிடித்த ஸ்பூன் (கரண்டி) மூலம் தோண்டப்பட்ட சுரங்கம்
கில்போ சிறைச்சாலை இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அதி உயர் பாதுகாப்பு வசதிகள் கொண்ட சிறைச்சாலைகளில் ஒன்று.

இங்குள்ள பாதுகாப்பு வசதிகள் காரணமாக இந்த சிறைச்சாலை ஆங்கிலத்தில் 'தி சேஃப்' (The Safe) என்று அழைக்கப்படுகிறது.

சந்தேகத்திற்குரிய நபர்கள் வயல்கள் வழியாக ஓடுவதை விவசாயிகள் பார்த்த பின்னரே சிறையில் இருந்த ஆறு பேரும் தப்பியது சிறை அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.

உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 4 மணி அளவில் சிறை அதிகாரிகள் கைதிகளை எண்ணிய பொழுது ஆறு பேர் குறைவாக இருந்தனர். இதன் மூலம் சிறைக் கைதிகள் தப்பி ஓடியது உறுதி செய்யப்பட்டது.

சிறையில் இருந்த ஒரு போஸ்டருக்கு பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த துருப்பிடித்த ஸ்பூன் ஒன்றைக் கொண்டு இவர்கள் இந்த சுரங்கத்தை தோண்டினர் என்று தி ஜெருசலம் போஸ்ட் எனும் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்கள் சிறை அறையின் கழிப்பிடத்தில் தோண்டிய குழி, சிறையின் தளத்துக்கு கீழே இருந்த ஒரு வெற்று இடத்தை சென்றடைந்தது.

இந்தச் சிறையில் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்ட பொழுதே தரைக்கு அடியில் வெற்றிடம் வைத்து கட்டப்பட்டிருந்தது.

சிறையின் கட்டுமானத்தில் உள்ள கோளாறின் காரணமாகத்தான் இவர்களால் தப்பி ஓட முடிந்தது என்று இஸ்ரேலிய காவல்துறை கமாண்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தரைக்கு அடியில் இருந்த காலி இடத்தை தாங்கள் தோண்டிய குழி மூலம் சென்றடைந்த அந்த ஆறு பேரும் அங்கிருந்து ஒரு சுரங்கத்தை தோண்டி சிறையின் சுற்றுச் சுவருக்கு வெளியே உள்ள ஒரு சாலை வரை தோண்டி அதன் மூலம் தப்பியுள்ளனர்.
தப்பியவர்கள் யார்? அவர்கள் மீதான குற்றச்சாட்டு என்ன?
தப்பியவர்களில் ஒருவரான சக்காரியா ஜூபெய்தி மேற்குக் கரையில் உள்ள நகரான ஜெனி எனும் நகரிலுள் அல்-அக்சா தியாகிகள் படையின் முன்னாள் தளபதியாவர்.

மீதமுள்ள ஐந்து உறுப்பினர்களில் நால்வர் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தியது மற்றும் கொலை செய்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் என்றும் ஐந்தாவது நபர் குற்றச்சாட்டு எதுவும் இல்லாமல் தடுப்பு ஆணை ஒன்றின் மூலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்றும் இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட சக்காரியா ஜூபெய்தி 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இஸ்ரேலிய ராணுவத்தினர் மற்றும் எல்லை காவல் படையினர் தப்பியோடிய கைதிகளைக் கண்டு பிடிப்பதற்காக ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை மற்றும் ஜோர்டான் எல்லையில் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். கில்போ சிறைச் சாலையில் இருந்து கிழக்கே 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஜோர்டான் எல்லை.

No comments:

Post a Comment