(இராஜதுரை ஹஷான்)
இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்களை தற்காலிகமாக தடை செய்ய அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை விமர்சித்து எதிர்த்தரப்பினர் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள். இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷடி சில்வாவுடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபடத் தயாராக உள்ளேன் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தவறான வெளிநாட்டு கையிருப்பு முகாமைத்துவம், ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தினாலும் கொவிட்-19 வைரஸ் பெருந்தொற்று தாக்கத்தினாலும் வெளிநாட்டு கையிருப்பில் பெரும் பாதிப்பு ஏற்பட்டன.
இவ்வாறான நிலையில் மத்திய வங்கியின் நிதிச் சபை கடனை கட்டுப்படுத்துவதற்காக கடன் பத்திரங்கள் விநியோகிக்கும்போது முறையான திட்டங்களை தற்போது கையாள்கிறது.
இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்கள் முழுமையாக தடை செய்யப்படவில்லை. அத்துடன் இறக்கமதி வரியும் அதிகரிக்கப்படாது. இதனால் தேசிய மட்டத்தில் இப்பொருட்களுக்கான தட்டுப்பாடு விலை அதிகரிப்பும் ஏற்படாது.
அனைத்து வங்கி கட்டமைப்பை நிர்வகிப்பதற்கான கடன் முகாமைத்துவமாக மத்திய வங்கி இதனை செயற்படுத்தியுள்ளது. அத்துடன் கடன் கட்டுப்பாடு முறைமைகளில் சிறந்த கட்டுப்பாட்டு முறைமைகள் தற்போது பேணப்படுகிறது.
இதற்கமைய இந்த 623 பொருட்களுக்காக கடன் பத்திரம் வெளியிடுவதற்கான முழுமையான பெறுமதி வைப்பில் வைக்கப்பட்ட நிலையில் வங்கிகள் கடன் பத்திரங்களை வெளியிடும். இதன் நோக்கம் 623 பொருட்கள் இறக்குமதி செய்யும்போது நிதி வெளிச் செல்வதை கட்டுப்படுத்துவதாகும்.
உதாரணமாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யும்போது வங்கிக் கட்டமைப்பினால் முழு பெறுமதியும் வைப்பிலிடப்படாது. ஒரு பகுதி மாத்திரம் வைப்பிலிடப்பட்டு, பொருட்கள் கப்பலுக்கேற்றப்பட்டதன் பின்னர் தேவையான ஆவணங்கள் வங்கிகளுக்கு அனுப்பட்டு வங்கியினால் அந்த ஆவணங்கள் வெளிப்படுத்தப்பட்டதன் பின்னர்தான் மிகுதித் தொகை செலுத்தப்படும்.
ஆரம்பத்தில் 25 சதவீதத்தை வைப்பிலிட்டு 623 பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் தற்போது 100 சதவீதத்தையும் முழுமையாக வைப்பிலிட்டு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பில் பேராசிரியர் ஹர்ஷடி சில்வாவுடன் பகிரங்க விவாதத்திற்கு தயார் என்றார்.
No comments:
Post a Comment