சிறுவர்களை கொவிட் தொற்றின் அபாயத்திலிருந்து பாதுகாக்க பைசர் தடுப்பூசியே பொறுத்தமானது : இதுவரை எந்தவொரு தடுப்பூசியும் பெறாது 60 வயதுக்கு மேற்பட்ட 3 இலட்சம் பேர் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, September 3, 2021

சிறுவர்களை கொவிட் தொற்றின் அபாயத்திலிருந்து பாதுகாக்க பைசர் தடுப்பூசியே பொறுத்தமானது : இதுவரை எந்தவொரு தடுப்பூசியும் பெறாது 60 வயதுக்கு மேற்பட்ட 3 இலட்சம் பேர் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

(எம்.மனோசித்ரா)

சிறுவர்களை கொவிட் தொற்றின் அபாயத்திலிருந்து பாதுகாப்பதற்கு பைசர் தடுப்பூசியை வழங்குவதே பொறுத்தமானதாகும். இதனை உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட முக்கிய சர்வதேச சுகாதார அமைப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளன. எனவே ஒக்டோபரில் பெற்றுக் கொள்ளப்படவுள்ள 4 மில்லியன் பைசர் தடுப்பூசிகளை 12 - 18 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

அத்தோடு நாட்டில் இதுவரையில் எந்தவொரு தடுப்பூசியும் கிடைக்கப் பெறாத 60 வயதுக்கும் மேற்பட்ட 3 இலட்சம் பேர் உள்ளனர். இவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகளை துரிதமாக முன்னெடுப்பதன் மூலம் எதிர்வரும் காலத்தில் பதிவாகக் கூடிய மரணங்களில் 90 வீதமானவற்றை குறைக்க முடியும் என்றும் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் பதிவாகும் மரணங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை தடுப்பூசி பெறப்படாதவர்களுடையதாகும். இவர்களில் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு முக்கியத்துவமளிக்கப்பட வேண்டும்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கிளை ஊடாக மாவட்ட ரீதியில் எமக்கு கிடைக்கப் பெற்ற தரவுகளின் அடிப்படையில் 60 வயதுக்கு மேற்பட்டோரில் சுமார் 3 இலட்சம் பேர் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்களாகவுள்ளனர். இவர்களுக்கு துரிதமாக தடுப்பூசி வழங்கும் பணிகளை முன்னெடுத்தால் எதிர்வரும் காலத்தில் பதிவாகக் கூடிய மரணங்களில் 90 வீதமானவற்றை குறைக்க முடியும். இது தொடர்பில் தொற்று நோயியல் பிரிவு உரிய அவதானத்தை செலுத்த வேண்டும்.

முன்னர் ஏற்பட்ட கொவிட் அலைகளை விட தற்போது சிறுவர்கள் தொற்றுக்குள்ளாகும் வீதமும் அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை காலமும் கொவிட் தொற்றுக்கு உள்ளான சிறுவர்களில் 180 பேர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலைக்கு உள்ளாகினர். இவ்வாறு அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவர்களில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனவே சிறுவர்களை அபாய நிலைமையிலிருந்து பாதுகாப்பதற்கும், பாடசாலைகளை துரிதமாக மீள ஆரம்பிப்பதற்கும் அவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகளை துரிதமாக ஆரம்பிக்க வேண்டும்.

சீனாவில் தயாரிக்கப்படுகின்ற சைனோபார்ம் தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்குவதற்கு பொறுத்தமானது என்பதை அதனை தயாரிக்கும் நிறுவனமே தெரிவித்துள்ளது.

12 - 18 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்களுக்கு வழங்குவதற்கு பொறுத்தமானது பைசர் தடுப்பூசியாகும். இதனை உலக சுகாதார ஸ்தாபனம், பைசர் தயாரிப்பு நிறுவனம், அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவை இதனை குறிப்பிட்டுள்ளன.

இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கொவிட் செயலணி கூட்டத்தில் இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஒக்டோபரில் 4 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்கப் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை 12 - 18 வயதுக்கு உட்பட்ட 2.2 மில்லியன் பேருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment