(இராஜதுரை ஹஷான்)
நிறைவடைந்த எட்டு மாத காலத்தில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்கள். இவர்களில் 270 பேர் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி முழுமையாக குணமடைந்துள்ளார்கள். எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் நாளாந்தம் 1500 தொடக்கம் 2000 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தருவார்கள். சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை துரிதமாக மேம்படுத்தினால் மாத்திரமே பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சீர் செய்ய முடியும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
சுற்றுலாத்துறை ஹோட்டல் முகாமைத்துவம் பயிற்சி நிறுவகத்தில் நேற்று (19) சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுடன் இடம் பெற்ற பேச்சுவார்த்தையின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டு மக்கள் அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றவுடன் இலங்கையை சிவப்பு பட்டியலில் உள்ளடக்கி நாடுகளுடன் தடையை நீக்குமாறு பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும். இதற்கான நடவடிக்கைகள் தற்போது இராஜதந்திர மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, ஜேர்மன், கனடா, சீனா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு சுற்றுலா பயணத்தை மேற்கொள்ள தடை விதித்துள்ளன.
பிரித்தானியா கடந்த வாரம் இலங்கையை சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. கடந்த மாதங்களில் கொவிட் தாக்கம் தீவிரமடைந்ததால் இந்நாடுகள் இலங்கைக்கு சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என தடை விதித்துள்ளன.
சுகாதார தரப்பினரது அறிவுறுத்தல்களுக்கு அமைய சுற்றுலாப் பயணிகளுக்கான சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை நடைமுறைக்கு ஏற்றாப்போல் செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment