(ஐ.ஏ. காதிர் கான்
ஒவ்வொரு பொலிஸ் அதிகாரிகளும் கடமையில் ஈடுபடும்போது, கொவிட் வைரஸ் தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என, மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர, பொலிஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அமைச்சில் (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொலிஸ் அதிகாரிகள் பலர் கலந்துகொண்ட இச்சந்திப்பில், அமைச்சர் அங்கு தொடர்ந்தும் பேசும்போது, ஒவ்வொரு பொலிஸ் அதிகாரிகளும் கொவிட் தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். இரவு பகல் எனப்பாராமல் தம்மைத் தியாகம் செய்கின்றனர்.
இவ்வாறான நிலையில், கொவிட் தொற்றுக்கு மத்தியில் பொலிஸ் அதிகாரிகளின் பணி பாராட்டத்தக்கது. இதற்காக, அரசாங்கம் என்ற வகையில் பெருமிதத்துடன் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
எனினும், ஒவ்வொரு பொலிஸ் அதிகாரிகளும் கொவிட் தொற்றுக்கு மத்தியில் தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ள முற்பட வேண்டும்.
இதுவரை, பொலிஸ் அதிகாரிகள் 11,700 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக நான் அறிகிறேன்.
இதேவேளை, கொவிட் தொற்றினால் இதுவரை 28 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாகவும் எனக்கு அறியக் கிடைத்துள்ளது.
இதையிட்டு, அரசு சார்பில் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
No comments:
Post a Comment