அரசாங்கத்தை அசௌகரியங்களுக்குட்படுத்தும் வகையிலும் மக்களைப் பாதிப்புக்குள்ளாக்கும் வகையிலும் பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 26, 2021

அரசாங்கத்தை அசௌகரியங்களுக்குட்படுத்தும் வகையிலும் மக்களைப் பாதிப்புக்குள்ளாக்கும் வகையிலும் பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வேண்டுகோள்

தற்போதைய கொரோனா வைரஸ் ஒழிப்பு காலகட்டத்தில் பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசாங்கத்தை அசௌகரியங்களுக்குட்படுத்தும் வகையிலும் மக்களைப் பாதிப்புக்குள்ளாக்கும் வகையிலும் பொய் பிரசாரங்களை மேற்கொள்பவர்கள் தொடர்பில் பொலிஸ் கணினி குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. 

அவ்வாறு பொய் பிரசாரங்களை மேற்கொள்வோரை அடையாளம் காணும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

களுபோவில வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணமடைந்தவரின் சடலங்கள் அங்குமிங்கும் போடப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு புகைப்படங்களை வைத்து சமூக தளங்களில் போலியான தகவல்களை பதிவு செய்துள்ள சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

பொலிஸ் கணினி குற்றத் தடுப்பு விசாரணை பிரிவின் மூலம் கடந்த 23ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தேர்தலின் போதே மேற்படி சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

நுகேகொட பகுதியை சேர்ந்த 36 வயதுடைய அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 16ஆம் திகதி அவரை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சந்தேக நபருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டம், தண்டனைக் கோவை குற்றவியல் சட்டம், கணினி குற்றத் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment