இறுதி நொடி வரை மக்கள் வெளியேற்றப் பணிகள் தொடரும் : காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் நடக்கலாம் - புதிய எச்சரிக்கையை விடுத்தது அமெரிக்க உளவுத்துறை - News View

About Us

About Us

Breaking

Friday, August 27, 2021

இறுதி நொடி வரை மக்கள் வெளியேற்றப் பணிகள் தொடரும் : காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் நடக்கலாம் - புதிய எச்சரிக்கையை விடுத்தது அமெரிக்க உளவுத்துறை

ஐ.எஸ் குழுவினர் தாக்குதல் நடத்தலாம் என்கின்ற அச்சுறுத்தல்களுக்கும் இடையிலும், இறுதி நொடி வரை காபூல் விமான நிலையத்தில் இருந்து மக்களை வெளியேற்றுவோம் என அமெரிக்கா கூறியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை காபூல் விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதலில் 170 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள் என காபூலில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

காபூல் விமான நிலையத்துக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படலாம் என நம்பத்தகுந்த அச்சுறுத்தல்கள் இருப்பதாக பென்டகன் கூறுகிறது.

பல நேட்டோ நாடுகள் தங்களின் அவசரகால விமான சேவைகளை நிறுத்திக் கொண்டுவிட்டன.

விமான நிலையத்தில் நிலவும் பாதுகாப்புப் பிரச்சினைகளை காரணமாகக் கூறி, பிரான்ஸ் வெள்ளிக்கிழமை தன் மீட்புப் பணிகளை நிறுத்திக் கொண்டது. பிரான்ஸ் 3,000 பேரை ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்டிருப்பதாகக் கூறுகிறது.

ஆகஸ்ட் 31ஆம் திகதியோடு அமெரிக்க படைகள் ஆஃப்கானை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்காவால் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகள் விமான நிலையத்தில் இருந்து கிளம்ப தயார் செய்து கொண்டிருப்பதாகவும், தலிபான்கள் அடுத்த சில மணி நேரங்களில் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவார்கள் என தன் வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்திருப்பதாக காபூலில் இருக்கும் பிபிசியின் முதன்மை சர்வதேச செய்தியாளர் லைஸ் டாசெட் கூறுகிறார்.

விமான நிலையத்தில் சில பகுதிகளை தாங்கள் கட்டுப்படுத்தத் தொடங்கி விட்டதாக வெள்ளிக்கிழமை இரவே தலிபானின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார். ஆனால் அதை பென்டகன் மறுத்தது.

பென்டகன் கூற்றின் படி, விமான நிலையத்தில் 5,000 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளே இருக்கிறார்கள். விமான நிலையத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய தலிபானுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இரு வாரங்களுக்கு முன் தொடங்கிய மக்களை வெளியேற்றும் பணியில் இதுவரை 1,11,000 பேர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் என வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற விரும்பும் அமெரிக்க குடிமக்கள், அமெரிக்க படைகளோடு வெளியேற முன்னுரிமை கொடுக்கப்படும். அவர்களை விமான நிலையத்துக்கு அழைத்து வர பல வழிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஆனால் ஆப்கானிஸ்தானனில் இருக்கும் அமெரிக்க தூதரகமோ, மக்கள் விமான நிலையத்துக்கு செல்ல வேண்டாம் எனவும், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் விமான நிலைய நுழைவாயில்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்துகிறது.

காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல், தற்கொலை குண்டுதாரியால் நடத்தப்பட்டது என பிரிட்டனின் பாதுகாப்புச் செயலர் பென் வாலஸ் கூறினார்.

விமான நிலையத்துக்கு அருகில் இருந்த விடுதியில் இரண்டாவது வெடி விபத்து நிகழவில்லை என அமெரிக்க அதிகாரிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) உறுதிப்படுத்தி உள்ளனர்.

ஐ.எஸ் - கே என்றழைக்கப்படும் இஸ்லாமிய அரசு கொரோசன் என்கின்ற அமைப்பு வியாழக்கிழமை நடந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

காபூல் விமான நிலையத்தில் மக்களை வெளியேற்றும் பணி மீண்டும் நடந்து வருகிறது. இந்த நிலையில் காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என இன்று அமெரிக்க உளவுத்துறை புதிய எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.

இதற்கு இடையில், காபூலில் அடுத்த சில நாட்களில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில நாட்கள் மிகவும் அபாயகரமான காலமாக இருக்கலாம் என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இது குறித்து அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறும் போது, ‘காபூல் விமான நிலையத்தில் இன்னும் நம்பகமான அச்சுறுத்தல் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம்’ என்றார்.

இதையடுத்து அமெரிக்க தூதரகம் சார்பில் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் காபூல் விமான நிலையத்தில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே காபூல் விமான நிலையத்தில் அபே நுழைவு வாயில், கிழக்கு, வடக்கு அல்லது புதிய அமைச்சக நுழைவு வாயில் ஆகியவற்றில் இருக்கும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும்.

நாங்கள் அமெரிக்க குடிமக்களுக்கு காபூல் விமான நிலையத்தை நோக்கி செல்வதையும், விமான நிலைய நுழைவு வாயிலில் குவிய வேண்டாம் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment