இராஜதுரை ஹஷான்
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விற்பனை விலையை அதிகரிக்கும் தீர்மானம் ஏதும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. சந்தையில் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு ஏற்படும் என நுகர்வோர் அச்சம் கொள்ள வேண்டாம். லாப் சமையல் எரிவாயுவை பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் தற்போது நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அரச மற்றும் தனியார் சேவையாளர்களின் மாதச் சம்பளத்தை பலவந்தமான முறையில் அரசாங்கத்தினால் அறவிட முடியாது. நாட்டு மக்கள் விரும்பினால் தாராளமாக உதவி செய்யலாம் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக பூகோளிய மட்டத்தில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தேசிய பொருளாதாரத்திற்கு வருவாய் ஈட்டித்தரும் மார்க்கங்கள் அனைத்தும் கொவிட் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சேவை துறைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
கொவிட் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து பொறுப்புடன் செயற்பட்டுள்ளது. அரசியல் நோக்கத்திற்காக எதிர்த்தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை.
அரசாங்கம் தற்போது நிதி நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது என்பதை பகிரங்கமாகவே அறிவித்துள்ளோம். நிதி நெருக்கடிக்கு பல்வேறு பொது காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment