எம்.மனோசித்ரா
கொழும்பில் மாவட்டத்தில் கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஜூலை மாதம் 4 தொகுதிகளாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக சடுதியாக அதிகரித்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதற்கமைய நான்கு வாரங்களுக்குள் குறித்த பகுதிகளில் டெல்டா பரவலானது 75 சதவீதம் அதிகரித்துள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி ஜூலை மாதம் முதலாம் வாரத்தில் கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட சில பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட 31 பி.சி.ஆர். பரிசோதனைகளில் 6 டெல்டா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இது நூற்றுக்கு 19.3 சதவீதமாகும்.
அதனையடுத்து மூன்றாம் வாரத்தில் அதாவது ஜூலை 16 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்ட 27 பி.சி.ஆர். பரிசோதனைகளில் 17 பேருக்கு டெல்டா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. இது நூற்றுக்கு 62.9 சதவீதமாகும்.
கொழும்பு மாநகர சபை, பிலியந்தல மற்றும் பொலிஸ் வைத்தியசாலைகளிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகளிலிருந்து இந்த 17 டெல்டா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதற்கமைய ஜூலை முதலாம் வாரத்தில் 19.3 சதவீதமாகக் காணப்பட்ட டெல்டா தொற்றானது ஜூலை இறுதியில் 75 சதவீதமாக அதிகரித்துள்ளதன் ஊடாக கொழும்பில் டெல்டா தொற்றின் தீவிர நிலைமை தெளிவாக வெளிப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment