(ஆர்.யசி)
நாட்டை முடக்கினாலும், பயணக் கட்டுப்பாடுகளை விதித்தாலும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றினாலும் புதிய வைரஸ் பிறழ்வுகள் ஏற்படுவதை ஒரு போதும் தவிர்க்க முடியாது என வைத்தி நிபுணர் சந்திம ஜீவந்தர கூறுகின்றார்.
உலகில் அதிக கவனம் செலுத்தப்படுகின்ற தென்னாபிரிக்க கொரோனா வைரஸ் குறித்து ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தரவிடம் வினவியபோதே அவர் இதனை தெளிவுபடுத்தினார்.
அவர் மேலும் கூறுகையில், தற்போது கூறப்படும் தென்னாபிரிக்க வைரஸான (சி.1.2) பிரதானமாக தனது எஸ் புரோட்டீன் தன்மையில் வேறுபாட்டை காட்டுகின்றது என கண்டறியபட்டுள்ளது. ஆகவேதான் இந்த வைரஸ் பரவினால் தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாது என கூறப்படுகின்றது. இது வைத்திய நிபுணர்களின் சந்தேகமா இருந்தாலும் அந்த சந்தேகத்தில் உண்மை உள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
இலங்கையில் எப்போதும் எந்த சூழ்நிலையிலும் புதிய வைரஸ் பரவலாம். அதற்கான அச்சுறுத்தல் நிலைமை அதிகமாகவே உள்ளது. காரணம் என்னவெனில், இலங்கை சுற்றுலாத் துறையை பிரதானமாக கொண்ட நாடாகும். நாட்டின் பொருளாதாரத்தில் அதிக பங்களிப்பை சுற்றுலாத் துறை செய்கின்றது. ஆகவே நாடு திறக்கப்படும் நேரங்களில் சவால்கள் எமக்கு காத்திருக்கின்றன.
எனவே தடுப்பூசிகளை நம்பியே எமது நீண்ட கால வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. உலகில் 80 தொடக்கம் 90 வீதமான மக்களுக்கு தடுப்பூசி ஏற்றி இந்த வைரஸும் சாதாரண காய்ச்சல் தலைவலி போன்றது என்ற நிலையை உருவாக்கினால் மட்டுமே எம்மால் சாதாரண நிலைக்கு செல்ல முடியும் என்றார்.
No comments:
Post a Comment