(இராஜதுரை ஹஷான்)
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் போது நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்தினோம். ஆனால் இதுவரையில் எவ்வித நிவாரணமும் கிடைக்கப் பெறவில்லை. எனவே வேறுவழியின்றி விலைகளை அதிகரிக்கின்றோம் என பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாணின் விலை 5 ரூபாவினாலும், ரோஸ்பாண், பணிஸ், கிம்புலா பணிஸ், மாலுபாண் ஆகிய உணவு பொருட்கள் 10 ரூபாவினாலும், ஒரு கிலோ கிராம் கேக் 100 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும்.
சீனி ஒரு கிலோ கிராம் 37.5 ரூபாவில் அதிகரிக்கப்பட்டுள்ளது, சமையல் எரிவாயுவின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. இவ்விரு பொருட்களின் விலைகளும் கடந்த இரு மாத காலத்திற்குள் சுமார் 900 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் பேக்கரி உற்பத்திக்கான மூலப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் பேக்கரி உற்பத்தியாளர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
நெருக்கடியான நிலையில் விலை அதிகரிக்காமல் பேக்கரி உற்பத்தியை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முடியாது.
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் போது நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்தினோம்.
ஆனால் இதுவரையில் எவ்வித நிவாரணமும் கிடைக்கப்பெறவில்லை. இதன் காரணமாகவே அனைத்து உணவு பொருட்களின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment