(எம்.ஆர்..எம்.வசீம்)
நாடு எதிர்கொண்டுள்ள மோசமான நிலைமையில் இருந்து நாட்டை மீட்பதற்கு அரசாங்கத்துக்கு தேவையானவர்களை மாத்திரம் இணைத்துக் கொண்டு செயற்படாமல் அனைத்து தரப்பினரையும் இணைத்துக் கொண்டு அரசாங்கம் வேலைத்திட்டம் ஒன்றை அமைக்க வேண்டும். அந்த வேலைத்திட்டத்துக்கு பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட நாங்கள் தயாராக இருக்கின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
நாடு எதிர்கொண்டுள்ள அனர்த்த நிலைமையில் மக்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி எடுக்க இருக்கும் நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் நிலைமை என்னும் எவ்வளவு காலத்துக்கு நாட்டுக்குள் இருக்கும் என யாருக்கும் தெரியாது. என்றாலும் நாங்கள் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை மேற்கொள்கின்றோம்.
அதேபோன்று பூஸ்டர் ஏற்ற வேண்டிய நிலை ஏற்படுமா? அதற்கு எங்களிடம் பணம் இருக்கின்றதா போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செல்லுத்த வேண்டும்.
இதற்காக அனைத்து கட்சிகளை இணைத்துக் கொண்டு பொதுவான வேலைத்திட்டம் அமைக்க வேண்டும். எதிர்க்கட்சியிலும் இது தொடர்பாக செயற்படுவதற்கு திறமையானவர்கள் இருக்கின்றார்கள். அதேபோன்று அரசில் வாதிகள் மாத்திரமல்லாது புத்திஜீவிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் தங்களுக்கு மிக நெருக்கமானவர்களை மாத்திரம் இணைத்துக் கொண்டு நாட்டை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் இது தொடர்பாக அனுபவம்,திறமை இருக்கும் அனைவரையும் இணைத்துக் கொண்டு மேற்கொள்ளும் வேலைத்திட்டத்துக்கு எதிர்க்கட்சி என்ற வகையில் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க நாங்கள் தயார் என்றார்.
No comments:
Post a Comment