தமிழ் அரசியல் கைதிகளின் பட்டியலுடன் ஜனாதிபதி ஆலோசனை சபையை சந்திக்கத் தயாராகிறார் எம்.ஏ. சுமந்திரன் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 28, 2021

தமிழ் அரசியல் கைதிகளின் பட்டியலுடன் ஜனாதிபதி ஆலோசனை சபையை சந்திக்கத் தயாராகிறார் எம்.ஏ. சுமந்திரன்

ஆர்.ராம்

நாடாளவிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பட்டிலுடன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையிலான ஆலோசனை சபையை சந்திப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தயாராகி வருகின்றார்.

கடந்த 25ஆம் திகதி 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 13ஆவது பிரிவுக்கு ஏற்ப, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆலோசனை சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சட்டத்துறைப் பணிப்பாளர் நாயகம் உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹனதீர அறிவித்திருந்தார்.

முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையிலான இந்த ஆலோசனை சபையின் ஏனைய உறுப்பினர்களாக, ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. ஏ. ஆர்.ஹெய்யந்துடுவ மற்றும் ஓய்வுபெற்ற சொலிசிட்டர் ஜெனரல் சுஹத கம்லத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இச்சபையானது, பயங்கரவாத நடவடிக்கைகள் சம்பந்தமாக சிறைத் தண்டனையை அனுபவிக்கும் மற்றும் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் குறித்து கண்டறிதல், விடுதலை செய்தல், பிணை வழங்குதல் உள்ளிட்ட எதிர்காலத் தீர்மானங்கள் தொடர்பில் ஜனாதிபதி அவர்களுக்கு பரிந்துரைகள் மற்றும் ஆலோசனை வழங்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளது.

இந்நிலையில் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடத்தில் குறித்த சபை ஊடாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது அன்புக்குரியவர்களின் விடுதலைக்கான முயற்சிகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதற்கு அமைவாக, முதற்கட்டமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பட்டியலை மேற்படி சபைக்கு அனுப்ப உள்ளதாகவும், அதன் பின்னர் குறித்த சபையின் அங்கத்தவர்களை நேரில் சந்தித்து பேச்சுக்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் ஏற்கனவே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடத்தில் பட்டியலொன்றை வழங்கியுள்ள நிலையில் தற்போது ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சபையிடத்திலும் அவ்விதமான பட்டியலொன்றை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், இவர்களின் விடுதலை விடயத்தில் சாத்தியமான அனைத்து வழிகளிலும் முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment