(லியோ நிரோஷ தர்ஷன்)
தலிபான்களின் ஆட்சியை இலங்கையால் ஒருபோதும் ஏற்க முடியாது. எனவே காபூலில் உள்ள இலங்கைத் தூதரகத்தை அங்கிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பாமியன் புத்தர் சிலையை அழித்த தலிபான்களை ஏற்று பிராந்தியத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகி விடக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்பானிஸ்தான் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அது குறித்து ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை தெளிவுப்படுத்துகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில், கொவிட் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள உலக நாடுகளுக்கு மற்றுமொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆப்பானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தலிபான் குழு கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்னர் ஆப்பானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி காணப்பட்ட போது ஜிஹாத் உள்ளிட்ட பல பயங்கரவாத குழுக்கள் அங்கு ஒன்றிணைந்தன. அமெரிக்க உலக வர்த்தக மைய தாக்குதலை நடத்திய அல்-கொய்தா அமைப்பும் ஆப்கானிஸ்தானில் இருந்தே செயற்பட்டது.
இவ்வாறானதொரு நிலையில் மீண்டும் ஆப்பானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளமையானது ஜிஹாத் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்களின் தளமாக ஆப்கான் மாறலாம் என்ற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனை நாம் நினைவில் வைத்து செயற்பட வேண்டும்.
குர்ஆனில் உள்ள விடயங்களை தவறாக அர்த்தப்படுத்தி உலகை தாக்குவதை யாராலும் அனுமதிக்க இயலாது. பாராம்பரிய முஸ்லிம் நாடுகள் உள்ளிட்ட ஏனைய அனைத்து நாடுகளுக்கும் இதன் அச்சுறுத்தல் உள்ளது. எனவே இது குறித்து நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தலிபான்களின் ஆட்சியை எம்மால் ஏற்க முடியாது. எனவே காபூலில் உள்ள இலங்கைத் தூதரகத்தை அங்கிருந்து உடனடியாக நீக்க வேண்டும்.
மத்திய ஆசியாவிற்கான இலங்கையின் தூதகரத்தை மற்றுமொரு நாட்டில் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்தித்து அரசாங்கம் தலிபான்களை ஆட்சியை ஏற்காது செயற்பட வேண்டும்.
மீண்டும் தலிபான்களின் ஆட்சி ஊடாக ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து கவனத்தில் கொண்டு தீர்மானங்களை அரசாங்கம் எடுக்க வேண்டும். அந்நாட்டுடனான தொடர்புகள் மற்றும் பயணங்கள் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும்.
அவ்வாறு அல்லாது பாமியன் புத்தர் சிலையை அழித்த தலிபான்களை அனுமதித்து பிராந்தியத்தில் இல்லாமலாக்கப்பட்ட பயங்கரவாதம் மீண்டும் ஏற்படும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment