(இராஜதுரை ஹஷான்)
கொவிட்-19 வைரஸ் பரவல் கடந்த காலங்களை விட தீவிரமடைந்துள்ளது. பொதுப் போக்கு வரத்து சேவையினை பயன்படுத்தும் மக்கள் அதிக கவனமாக செயற்பட வேண்டும். அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. அரசாங்கம் வீண் செலவுகளை குறைத்து தேவையான உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். நாட்டு மக்கள் உயிருடன் இருந்தால்தான் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கம் கடந்த காலத்தை காட்டிலும் தீவிரமடைந்துள்ளது. நிலைமை எல்லை கடந்து சென்றுள்ளதை அவதானிக்க முடிகிறது. வைத்தியசாலைகளில் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. தொற்றாளர்களின் எண்ணிக்கையும், மரணங்களின் எண்ணிக்கையும் தினசரி அதிகரிக்கிறதே தவிர குறைவடையவில்லை.
தற்போது சந்தையில் எரிவாயு, பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. உலகில் ஏதேனும் பேரழிவுகள் இடம்பெற்று நிறைவு பெற்றதை தொடர்ந்து உணவு தட்டுப்பாடு ஏற்படும். வரலாற்றில் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கொவிட் தாக்கத்தை ஒரு பேரழிவாக கருத வேண்டும். ஒட்டு மொத்த உலகமும் அனைத்து மட்டங்களிலும் பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.
No comments:
Post a Comment