கிழக்கு மாகாணத்தில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 500 ஜ அண்மிக்கிறது. நேற்று வரை மரணங்களின் எண்ணிக்கை 447 ஆகியுள்ளது. கொவிட்19 மூன்றாம் அலையில் மட்டும் 421 மரணங்கள் சம்பவித்துள்ளன என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.
கிழக்கில் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை 27ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று வரை 27,201 தொற்றுகளும் 421 மரணங்களும் பதிவாகியுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் வழமைக்குமாறாக 24 மணி நேரத்தில் 618 தொற்றுகளும், 07 மரணங்களும் ஏற்பட்டுள்ளன. கொவிட் திரிபடைந்த வைரஸான டெல்டாவின் பரவலும் நிகழ்ந்துள்ளது. இது கிழக்கில் மற்றுமொரு பேராபத்து நெருங்குவதை காட்டுகிறது.
கிழக்கு மாகாணத்தில் இதுவரை காலமும் கண்டிராத கொரோனா தொற்றுக்களின் பதிவு கடந்த இரு தினங்களாக இடம்பெற்றுள்ளன.
நேற்றுமுன் தினம் ஏற்பட்ட 618 தொற்றுக்களில் அம்பாறை சுகாதார பிரிவில் 317 தொற்றுக்களும், கல்முனை சுகாதார பிராந்தியத்தில் 79 தொற்றுக்களும், திருகோணமலை மாவட்டத்தில் 07 தொற்றுக்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 215 தொற்றுக்களும் பதிவாகியுள்ளன.
இதேவேளை அம்பாறை பிராந்தியத்திலும் தொற்றுக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த இரு நாட்களில் 200 ஐ தாண்டிய தொற்றுக்கள் நேற்று அவ்வெண்ணிக்கை 317ஆக உயர்ந்துள்ளது.
அம்பாறை பிராந்தியத்தில் அதிகூடிய 102 தொற்றுக்கள் தெஹியத்தகண்டியவிலும், 57 தொற்றுக்கள் உகனைப் பிரதேசத்திலும், அம்பாறை நகரப் பிரதேசத்தில் 56 தொற்றுக்களும் பதிவாகியுள்ள அதேசமயம் கல்முனைப் பிராந்தியத்தில் அதிகூடிய 19 தொற்றுக்கள் பொத்துவில் பிரதேசத்திலும் ஏற்பட்டுள்ளன.
இதுவரை அம்பாறை பிராந்தியத்தில் 03 டெல்டா நோயாளிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்திற்கென கிடைக்கப் பெற்ற 9 லட்சம் தடுப்பூசிகளில் இதுவரை 8 இலட்சத்து 51 ஆயிரத்து 664 தடுப்பூசிகள் 80 வீதமானோருக்கு முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுவிட்டன.
காரைதீவு நிருபர்
No comments:
Post a Comment