மேலும் 1.86 மில்லியன் டோஸ் Sinopharm இலங்கையை வந்தடைந்தன : தடுப்பூசி போடாதவர்களை தேடும் நடவடிக்கை இன்றும் முன்னெடுப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, August 8, 2021

மேலும் 1.86 மில்லியன் டோஸ் Sinopharm இலங்கையை வந்தடைந்தன : தடுப்பூசி போடாதவர்களை தேடும் நடவடிக்கை இன்றும் முன்னெடுப்பு

மேலும் 1.86 மில்லியன் Sinopharm தடுப்பூசி டோஸ்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட குறித்த தடுப்பூசிகள் இன்று (08) காலை ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் இவை வந்தடைந்துள்ளன.

சீனாவில் மீண்டும் கொவிட் தொற்று பரவ ஆரம்பித்துள்ள நிலையில், அங்கு காணப்படும் தடுப்பூசி கேள்வி மற்றும் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பித்துள்ள நிலையிலும், இலங்கைக்கு 4 மில்லியன் தடுப்பூசி வழங்குதவதாக உறுதியளித்தமைக்கான கடப்பாட்டின் அடிப்படையில் இரு கட்டங்களாக இவ்வாறு தடுப்பூசிகளை வழங்குவதாக, இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய இறுதியாக கடந்த வெள்ளிக்கிழமை (06) 2.14 மில்லியன் Sinopharm தடுப்பூசி டோஸ்களும், இன்றையதினம் (08) 1.86 மில்லியன் தடுப்பூசிகளுமென 4 மில்லியன் தடுப்பூசிகளை சீனா வழங்கியுள்ளது.

அந்த வகையில் இதுவரை சீனாவிலிருந்து 2.7 மில்லியன் இலவச தடுப்பூசிகள் உள்ளடங்கலாக 14.7 மில்லியன் (1.47 கோடி) Sinopharm தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இலவசமாக கிடைத்தவை (2.7 மில்.)
மார்ச் 31 - 600,000 (0.6 மில்.)
மே 25 - 500,000 (0.5 மில்.)
ஜூலை 27 - 1,600,000 (1.6 மில்.)

கொள்வனவு செய்யப்பட்டவை (12 மில்.)
ஜூன் 06 - ஒரு மில்லியன்
ஜூன் 09 - ஒரு மில்லியன்
ஜூலை 02 - ஒரு மில்லியன்
ஜூலை 04 - ஒரு மில்லியன்
ஜூலை 11 - 2 மில்லியன்
ஜூலை 11 - 2 மில்லியன்
ஓகஸ்ட் 06 - 2.14 மில்லியன்
ஓகஸ்ட் 08 - 1.86 மில்லியன்

அத்துடன் ஜப்பானிலிருந்து நன்கொடையாக மேலும், AstraZeneca தடுப்பூசி 728,000 டோஸ்கள் நேற்று பிற்பகல் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

குறித்த தடுப்பூசிகள் கேகாலை மாவட்டத்திலுள்ள மக்களின் தடுப்பூசி தேவைக்கு பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இதுவரை ஒரு டோஸ் தடுப்பூசியையும் பெறாத, கொழும்பிலுள்ள 30 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தேடி அவர்களை அறிவுறுத்துவது தொடர்பில் நேற்று (07) பிரஜா பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்படுவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதற்கமைய, சுகததாச அரங்கில் அவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment