(எம்.மனோசித்ரா)
வட கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் (ராகம வைத்தியசாலை) காணப்படும் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை துரிதமாக தகனம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் மற்றும் சடலங்களை தகனம் செய்யும் நடவடிக்கைகள் மீண்டும் தாமதமடையாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடலொன்று கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தலைமையில் ராகம வைத்தியசாலையில் இடம்பெற்றது.
அதற்கமைய ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் தகனம் செய்வதற்கு தாமதமாகியுள்ள 26 கொவிட் சடலங்களையும் துரிதமாக மஹர, வத்தளை, பியகம, ஜாஎல, கட்டான மற்றும் நீர்கொழும்பு ஆகிய நகர சபை மற்றும் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தகனசாலைகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடுகள் மிகவும் மனிதாபிமானமாகவும், உயிரிழந்தவர்களின் உறவினர்களை சங்கடப்படுத்தாத வகையிலும் முன்னெடுக்கப்படுகின்றன. குறித்த பிரதேசங்களின் நகர சபைத் தலைவர் மற்றும் பிரேத சபை தலைவர் இது தொடர்பான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பர்.
கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்யும் செயற்பாடுகள் தாமதமடையாத வகையிலும் மற்றும் பிரேத அறைகளில் சடலங்களை கொள்ளளவை விட அதிகரிக்காமல் பேணுவதற்கும் பிரதேச சபை தலைவர்கள் , சுகாதாரத் துறை, முப்படையினர், பொலிஸார், பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கிடையில் சிறந்த ஒருங்கிணைப்பைப் பேணுவதற்கு இதன் போது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.
No comments:
Post a Comment