மத்திய மாகாணத்தில் இதுவரை 1,063 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
மத்திய மாகாண கொவிட்-19 பாதுகாப்பு குழுக்கூட்டம் இன்று மத்திய மாகாண ஆளுனர் லலித் யூ கமகேயின் தலைமையில் இணைய வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சின் பிரஜாசக்தி செயல்திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி அவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கண்டி மாவட்டத்தில் 697 மரணங்களும், நுவரெலியா மாவட்டத்தில் 190 மரணங்களும், மாத்தளை மாவட்டத்தில் 176 மரணங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் 17 இலட்சத்து 43 ஆயிரத்து 469 கொவிட் தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கண்டி மாவட்டத்தில் 839,303 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 96.4 வீதமானோர் முதலாம் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.
மேலும் எதிர்வரும் 17 ஆம் திகதியிலிருந்து இரண்டாம் தடுப்பூசிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் 30 வயதிற்கு குறைந்தவர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்குவதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. அத்தோடு 2,560 பேர் நோய் தொற்றுக்குள்ளாகிய நிலையில், இனம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், நோய் தொற்று அதிகரித்துள்ள நிலையில் மக்கள் மிகவும் அவதானமாகவும் முகக் கவசங்கள் அணிதல், கைகளை கழுவுதல், சமூக இடைவெளிகளை பேணுதல் மற்றும் அத்தியாவசிய பயணம் தவிர ஏனைய பயணங்களை தவிர்தல் அருகே வழங்கப்படும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளல் போன்ற செயற்பாடுகளை மக்கள் தவறாது பின்பற்றுமாறும் பாரத் அருள்சாமி வேண்டுகோள் விடுத்தார்.
No comments:
Post a Comment