(இராஜதுரை ஹஷான்)
டெல்டா வைரஸ் பரவல் தீவிரமடைவதற்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுகிறது. பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ளது என்பதற்காக பொதுமக்கள் பொறுப்பற்ற வகையில் செயற்படகூடாது. சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்றினால் இச்சவாலை வெற்றிக் கொள்ளலாம் என அமைச்சரவை இணைபேச்சாளர் ரமேஷ் பதிரன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், டெல்டா மற்றும் கொவிட் வைரஸ் பரவல் தொடர்பிலான தகவல்களை மறைக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது. உண்மை தகவல்களை மறைத்தால் அரசாங்கமே நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.
கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களை காட்டிலும் தற்போது சடுதியாக குறைவடைந்த நிலையில் காணப்படுகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்துள்ளது.
நெருக்கடியான சூழ்நிலையில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகிறது என்றார்.
No comments:
Post a Comment