கொழும்பு மாநகர சபை பெண் உறுப்பினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதுடன், நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமும் முறையிடுவேன் - மேயர் ராேசி சேனாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Thursday, July 1, 2021

கொழும்பு மாநகர சபை பெண் உறுப்பினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதுடன், நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமும் முறையிடுவேன் - மேயர் ராேசி சேனாநாயக்க

(எம்.ஆர்.எம்.வசீம்)

கொழும்பு மாநகர சபை பெண் உறுப்பினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதுடன் அவருக்கு ஏற்பட்டிருக்கும் அநீதி தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமும் முறையிடுவேன் என கொழும்பு மாநகர சபை மேயர் ராேசி சேனாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபை மாதாந்த அமர்வு நேற்று புதன்கிழமை மேயர் ராேசி சேனாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. இதன்பாது நகர சபையின் பொதுஜன பெரமுன வெள்ளவத்தை தொகுதி பெண் உறுப்பினரான சுமித்ரலதா நபர் ஒருவரினால் தாக்கப்பட்டடிருப்பது தொடர்பில் தலையிட்டு, அவருக்கு நீதியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வண்டும் என நகர சபையில் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஒரு பெண்ணைத் தாக்குவது தண்டனைச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகும். தாக்குதலுக்கு ஆளான பெண் உறுப்பினருக்கு ஏற்பட்டிருக்கும் அநீதி தொடர்பில் கவனம் செலுத்துவோம். அத்துடன் இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முறைப்பாடு செய்வேன். வழக்கு தொடர்பான சட்ட உதவிகளை பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

தாக்குதலுக்கு ஆளான பெண் உறுப்பினர் சுமித்ரலதா, தனக்கு இடம்பெற்ற அநீதி தொடர்பில் விபரிக்கையில், மாநகர சபையில் உறுப்பனர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் வெள்ளவத்தை கெனல் லேன் பகுதியில் அமைந்திருக்கும் சனசமூக நிலையம் மற்றும் கிராம சேவகர் அலுவலகம் என்பவற்றை பிரித்து வேலி அமைக்கும் நடவடிக்கையை கடந்த வாரம் மேற்கொண்டேன். நகர சபை ஊழியர்களே அந்த பணியை மேற்கொண்டு வந்தார்கள். 

இதன்போது அந்த இடத்துக்கு வந்த, திலிப் பெர்ணான்டோ என்பவர், நான்தான் இந்த தொகுதி உறுப்பினர். வேறு யாருக்கும் இங்கு இடமில்லை என தெரிவித்து, என்னை தள்ளிவிட்டார். இதன்போது ஏற்பட்ட வாக்குவாதத்தால் அவர் என்மீது தாக்கினார். எனது கணவரும் பக்கத்தில்தான் இருந்தார். அவருடன் வந்த இன்னும் 3 பேர் எனது கணவர் மீதும் தாக்கி தள்ளி விட்டார்கள்.

இதன்போது எனது மகன் அந்த இடத்துக்கு வந்தபாேது எங்கள் மீது தாக்குதல் நடத்தியதனை கண்டு, எனது மகனும் திலிப் என்பவரை தாக்கினார். இதன்போது அவர் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு அவரது உதவியாளர்கள் சிலரை அங்கு வரவழைத்துக் கொண்டு எம்மை தாக்க முற்பட்டனர். அந்த இடத்தில் நகர சபை ஊழியர்கள் மற்றும் சிலரும் இருந்தார்கள். அவர்களால் எதனையும் செய்ய முடியவில்லை. பொலிஸ் அதிகாரிகள் இருவரும் அங்கு வந்திருந்தார்கள். அவர்களும் எங்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதை தடுக்கவில்லை.

பின்னர் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறையிட்டபாேது, அங்குவந்த திலிப் பெர்ணான்டோவும் இவர்கள் என்னை தாக்கினார்கள் என முறைப்பாடு செய்தார். இதன்போது பொலிஸ் பொறுப்பதிகாரி, இது இரு தரப்புக்கிடையில் இடம்பெற்ற பிரச்சினை என தெரிவித்து, வழக்கு தொடுத்தார். பொலிஸாரும் பக்கச்சார்ப்பாகவே செயற்பட்டனர். எங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதனை கண்ட பலரும் இருக்கையில், அவர்களை அழைத்து விசாரிக்கவில்லை.

அத்துடன் திலிப் பெர்ணான்டோ என்ற இந்த நபர் இதற்கு முன்னரும் பல தடவைகள் என்னை எச்சரித்திருக்கின்றார். கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர். இவர் எப்படி, தான் மாநகர சபை உறுப்பினர் என தெரிவிக்க முடியும்?. அத்துடன் இவர் தற்போது கொழும்பு மாநகர சபையில் எமது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரின் செயலாளராக பணியாற்றி வருகின்றார்.

பொலிஸாரும் இவருக்கு சார்பாகவே செயற்பட்டு வருகின்றனர். கொழும்பு மாநகர சபை உறுப்பினர் என பொய் கூறி மக்களை ஏமாற்றி வரும் இவருக்கு எதிராக பொலிஸார் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment