விவசாயிகளை பிழையாக வழி நடத்துவதற்கு அரசியல் தலையீடே காரணம். இதனால்தான் விவசாயிகள் இன்று சேதனை பசளை வேண்டாம் என கூறிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் வியாழக்கிழமை (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சேதனப் பசளை தொடர்பாக விவசாயிகள் மத்தியில் அதனுடைய நன்மை தீமை இதுவரைக்கும் சென்றடையவில்லை. இன்று அரிசியை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. தற்போது விவசாயிகள் கூட இதில் அதிர்ச்சி அடைந்த நிலையில் காணப்படுகின்றனர் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
இரசாயனப் பசளையா அல்லது சேதன பசளையா என்பது பிரச்சினை இல்லை, எமது நாட்டின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தியை எவ்வாறு அடைய முடியும் என்பதை பார்க்க வேண்டும்.
நாட்டின் பொருளாதாரத்தை உயர்வடையச் செய்கின்றவர்கள் விவசாயிகள், ஆனால் இன்றைய நாளில் அதிக அளவு நஷ்டத்தில் இருப்பவர்களும் விவசாயிகள்தான். இதற்கு காரணம் இரசாயன பசளை முறைமையே.
இரசாயன பசளை விவசாயிகளுக்கு இனாமாக வழங்கப்பட்டாலும் அவர்களுடைய வாழ்வாதாரம் உயர்வடையவில்லையே, தற்போது சேதனை பசளை முறைமையை ஆரம்பித்து இருக்கின்றோம்.
இந்த சேதனப் பசளையின் நன்மை தீமை தெரியாதவர்கள்தான் இன்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றார்கள். அவர்களை நாங்கள் தெளிவுபடுத்த வேண்டும். இன்று விவசாயிகள் ஏமாற்றப்பட்டு கொண்டு வருகின்றனர்.
விவசாயிகள் சேதனப் பசளை உற்பத்தி செய்வார்களாக இருந்தால், அரசாங்கம் அவர்களுக்கு மானியமாக பணம் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றது. அதற்கு அவர்கள் முன்வருவார்கள் என நம்புகின்றேன் என்றார்.
மட்டக்களப்பு, கல்லடி, காத்தான்குடி, ஆரையம்பதி நிருபர்கள்
No comments:
Post a Comment