வாகன விபத்துக்கள் குறைந்து வீட்டு வன்முறைகள் அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, July 10, 2021

வாகன விபத்துக்கள் குறைந்து வீட்டு வன்முறைகள் அதிகரிப்பு

தற்போதைய கொவிட்19 தொற்று நிலைமையின் போது வீட்டுடன் தொடர்புடைய விபத்துக்கள் முன்னைய காலங்களுடன் ஒப்பிடும் போது 50 வீதத்தில் இருந்து 75 வீதம் வரை அதிகரித்துள்ளதுடன் வீதி விபத்துக்கள் 9 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் (சமூக மருத்துவம்) விசேட வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க தெரிவித்தார்.

தேசிய விபத்து தடுப்பு வாரம் மற்றும் விபத்துக்களை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்பூட்டுவதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

பல்வேறு விபத்துக்களில் சிக்கி வருடாந்தம் 12 இலட்சம் பேர் வரை அரச மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுட்டிக் காட்டிய அவர், 2025 ஆம் ஆண்டாகும் போது இந்த தொகை 15 இலட்சத்தினை எட்டும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

வீதி விபத்துக்கள், விழுதல் மற்றும் சிராய்ப்பு, உடலில் விஷம் கலத்தல், விலங்குக் கடி, மின்சார தாக்குதல், தீக்காயங்கள், நீரில் மூழ்குதல் போன்ற பல விபத்துக்கள் காரணமாக வருடந்தோறும் 12,000 பேர் வரை உயிரிழப்பதாகவும் விசேட வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க மேலும் தெரிவித்தார்.

இலங்கை சனத் தொகையில் 12.4 வீதமான முதியோர்கள் (வயது 60 க்கு மேல்) விபத்துக்களில் சிக்குவதை தடுக்க வேண்டியதன் அவசியத்தை கலந்துரையாடலில் இணைந்து கொண்ட சுகாதார அமைச்சின் இளம், முதியோர் மற்றும் ஊனமுற்றோர் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஷிரோமி மாதுவகே சுட்டிக் காட்டினார்.

விபத்துக்களினால் முதியோர்கள் நீண்ட கால உபாதைகளுக்கு உள்ளாதல் மற்றும் அதன் மூலம் ஏற்படுகின்ற நோய் நிலைமைகள் காரணமாக நீண்ட நாட்கள் வைத்தியசாலையில் வைத்து சிகிச்சையளிக்க வேண்டிய நிலைமை ஏற்படுவதாக தெரிவித்த அவர், அரசாங்கம் ஒரு நபருக்கு நாளொன்றுக்கு சிகிச்சைக்காக வேண்டி பல ரூபாய்களை செலவிடுவதாகவும் தெரிவித்தார்.

ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் விசேட வைத்திய நிபுணர் (குழந்தை மருத்துவம்) ருவந்தி பெரேரா, குழந்தை மற்றும் முன் கட்டிளமைப் பருவ பிள்ளைகளுக்காக வேண்டி பாதுகாப்பான சூழலை நிர்மாணிப்பதன் அவசியம் குறித்து தெளிவுபடுத்தினார்.

குழந்தைகள் சம்பந்தப்பட்ட பெரும்பாலான விபத்துக்கள் வீட்டிலேயே நிகழ்வதாகவும் விபத்துக்களிலிருந்து தங்கள் குழந்தைகளை காப்பாற்றும் பாரிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

No comments:

Post a Comment