டயகம சிறுமியின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள தனி பொலிஸ் குழு அமைக்கப்பட வேண்டும் : பொரளை பொலிஸ் பொறுப்பதிகாரியின் தலைமையில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் வெளிப்படைத் தன்மை இல்லை - மனோ கணேசன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 20, 2021

டயகம சிறுமியின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள தனி பொலிஸ் குழு அமைக்கப்பட வேண்டும் : பொரளை பொலிஸ் பொறுப்பதிகாரியின் தலைமையில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் வெளிப்படைத் தன்மை இல்லை - மனோ கணேசன்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் இல்லத்தில் தீ காயங்களுக்கு உள்ளாகி உயிரழந்துள்ள டயகம தோட்ட சிறுமியின் மரணம் தொடர்பில் பொரளை பொலிஸ் அதிகாரியின் தலைமையில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பதால் விசாரணைகளை மேற்கொள்ள தனி பொலிஸ் குழு அமைக்கப்பட வேண்டும் என்பதுடன், குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டனை வழங்கப்பட வேண்டுமென தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று அமைச்சர் உதய கம்பன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நுவரெலியா மாவட்டம் டயகம தோட்டம் மூன்றாம் பிரிவை சார்ந்த ரஞ்சனி ராஜமாணிக்கம் ஜெயராஜ் ஜுட் குமார் தம்பதிகளின் மகள் ஹிசாலினி இம்மாதம் 3ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் இல்லத்தில் சந்தேகத்திற்கு இடமாக இடம்பெற்றுள்ள தீ விபத்தில் படுகாயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்தார்.

எவ்வித அழுத்தங்களுக்கும் முகங்கொடுக்கமால் இது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். விசாரணைகளை மேற்கொள்ள புதிய பொலிஸ் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும். விசாரணைகளில் இருந்து பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த பாலசூரியவை அகற்ற வேண்டும். அவரது விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை.

புதைக்கப்பட்ட ஹிசாலினியின் சடலம் மீண்டும் தோன்றியெடுக்கப்பட்டு புதிய சட்ட வைத்திய அறிக்கை பெறப்பட வேண்டும்.

மேலதிக விசாரணைகளின் ஊடாக புதிய பொலிஸ் குழு உண்மைகளை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். உயிரிழந்துள்ள சிறுமியின் வயதின் பிரகாரம் அவர் பணிக்கு அமர்த்தப்பட வேண்டியவரா, அவர் பாடசாலைக்குச் செல்ல வேண்டியவரா, விசாரணைகள் முற்றுப்பெற முன்னர் பொரளை பொலிஸ் பொறுப்பதிகாரி எவ்வாறு இது தற்கொலையென்ற முடிவுக்கு வந்தாரென வெளிப்படுத்தப்பட வேண்டும். சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றால் அதற்கான காரணமென்ன?.

சிறுமி தற்கொலை செய்து கொள்ள தூண்டப்பட்டாரா? பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கட்டுள்ளாரா? என்பது கண்டறிப்பட வேண்டும். சிறுமி பணியில் இருந்த வீட்டில் உள்ளவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட வேண்டும்.

அங்கு பெறப்பட்ட லைடர் யாருடையது? சிறுமி தற்கொலை செய்து கொண்டிருந்தால் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொள்ளாது ஏன் காலில் ஊற்றிக் கொள்ள வேண்டும்? என்பதற்கு பொரளை பொலிஸ் பொறுப்பதிகாரி விளக்கமளிக்க வேண்டும்.

குற்றம் நிகழ்ந்திருந்தால் குற்றவாளி எவராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகள் பெறப்பட வேண்டும். இவை அனைத்தையும் தமிழ் முற்போக்குக் கூட்டணி கண்காணிக்கும் என்றார்.

No comments:

Post a Comment