(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
இன்று (29) முதல் கொரோனா தடுப்பூசி பெறுவதற்காக சாய்ந்தமருதில் ஒன்லைன் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒன்லைனில் தங்களது விபரங்களை பதிவு செய்து, சாய்ந்தமருதில் அமைக்கப்பட்டுள்ள எந்த நிலையத்திற்கும் சென்று மக்கள் கொரோனாவுக்கான தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அல்-அமீன் றிசாத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது, ஒன்லைன் மூலமாக பதிவு செய்ய முடியாதவர்கள் தடுப்பூசி பெற்றுக் கொள்ள வருகின்ற போது, உங்கள் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், விலாசம், தொலைபேசி இலக்கம் போன்ற தகவல்களை காகிதத்தில் எழுதிக் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
மக்களை கொரோனா நோயின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கு எவ்வித பக்க விளைவுகளும் அற்ற சினோபார்ம் தடுப்பூசியினை முதல் தடவை பெற்று கொள்ளாதவர்கள் இன்று 29 ஆம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் 31 ஆம் திகதி சனிக்கிழமை வரை காலை 8 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை பின்வரும் நிலையங்களில் பெற்றுக்கொள்ளமுடியும்.
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் மூன்று மாதம் பூர்த்தி செய்யப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 14 ,16 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ளவர்கள் மற்றும் பொலிவேரியன் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும்.
சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள APC கிளினிக் சென்டரில் 2, 4, 6, 8, 10 ஆம் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும்.
சாய்ந்தமருது பிரதான வீதியிலுள்ள அல்-ஹிலால் வித்தியாலயத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆம் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும்.
சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலயத்தில் 12, 13, 15, 17 ஆம் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வழங்கப்படும்.
இதேவேளை, தடுப்பூசி வழங்கலின் போது ஏற்படும் காலதாமதத்தை தடுப்பதற்காக வீட்டில் இருந்தவாறே தங்களது தகவல்களை பதிவு செய்வதற்காக ஒன்லைன் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தடுப்பூசி நிலையத்துக்குச் சென்ற உடனே தங்களது தடுப்பூசியை காலதாமதம் இல்லாமல் உடனே பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்க் இன் ஊடாக பொதுமக்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும்.
Social Media Registration Form for Vaccine Recipient MoH-Sainthamaruthu
எனவே, இத்தடுப்பூசியைப் போடுவதற்கு கிடைத்த இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் அன்பாய் வேண்டிக் கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment