(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான திருத்தத்தை ஏன் முன்வைத்தேன் என்பதை சபையில் தெளிவுபடுத்திய ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க, புதிய நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவும் எரிபொருள் விலையேற்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீதான நம்பிக்கையில்லா பிரேரணையின் இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை கூறினார்.
மக்களின் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தாமை குறித்து நம்பிக்கையில்லா பிரேரணையில் கூறப்பட்டுள்ளது. இது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சகல அமைச்சர்களினதும் கடமையாகும்.
இதற்கமைய நம்பிக்கையில்லா பிரேரணையை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமென்றால் சகல அமைச்சரவை அமைச்சர்களையும் இதில் உள்வாங்க வேண்டும்.
அதேபோல் வாக்குறுதிகளை வழங்கியமைக்கு அமைய செயற்படாத காரணத்தினால் புதிய நிதி அமைச்சரையும் இதில் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
ஆனால் ஜனாதிபதியை நான் இதில் இணைத்துக் கொள்ளவில்லை, ஏனென்றால் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையே கொண்டுவர வேண்டும்.
ஆகவே அமைச்சரவையாக அல்லாது அமைச்சரவையில் உள்ள சகல அமைச்சர்களுக்கும் எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர வேண்டும். இதனையே நான் பிரேரணையாக முன்வைத்தேன், எனக் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment