மூன்று அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நான்கு இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தெரிவித்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் செயலாளர்கள் அழைக்கப்பட்டு அவர்களின் தகுதிகள் ஆராயப்பட்ட பின்னர் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உயர் பதவிகள் பற்றிய குழுக் கூட்டத்தில் அமைச்சர்களான நிமல் சிறிபால.டி.சில்வா, டக்ளஸ் தேவானந்தா, உதய கம்மன்பில, இராஜாங்க அமைச்சர்களான விதுர விக்ரமநாயக மற்றும் வைத்தியகலாநிதி சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்ட்டிகல, புத்தசாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜீ.எச்.எச்.குணவர்த்தன, கைத்தொழில் அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க ஆகியோருக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் சுனேத்ரா குணவர்த்தன,வௌிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ்.அருமைநாயகம், கூட்டுறவுச் சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்ர, தென்னை, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு மற்றும் அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவித்தாரன ஆகியோருக்கும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment