திருகோணமலை எண்ணெய் குதங்களை அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கத்துடன் பேச்சு என்கிறார் கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Thursday, July 8, 2021

திருகோணமலை எண்ணெய் குதங்களை அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கத்துடன் பேச்சு என்கிறார் கம்மன்பில

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

திருகோணமலை எண்ணெய் குதங்களை அபிவிருத்தி செய்வது குறித்து இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும், இலங்கையில் உள்ள எந்தவொரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தையும் சீனாவுக்கோ அல்லது வேறு எந்தவொரு நாட்டுக்கோ வழங்குவது குறித்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை, வாய்மூல வினாக்களுக்கான விடைகள் நேரத்தில் திருகோணமலை எண்ணெய் குதங்களை அபிவிருத்தி செய்வதுடன், இலங்கையின் எண்ணெய் நிலையங்களை சீனாவுக்கு வழங்குவதற்கு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது. இது உண்மையென்றால் எண்ணெய் நிலையங்களுடன் சேர்த்து மின்சார உற்பத்தி நிலையங்களையும் கொடுக்க வேண்டி வரும். ஏனெனில் இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயற்படுகின்றது. இது உண்மையா என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான ஹெஷா விதானகே, சமிந்த விஜயசிறி ஆகியோர் கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதில் தெரிவித்த அமைச்சர் உதய கம்மன்பில திருகோணமலை சீனக்குடாவில் உள்ள எண்ணெய் குதங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது, அதற்காக இந்திய அரசாங்கத்துடன் நாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம். 

இப்போதும் 1.2 மில்லியன் மெற்றிக் தொன் எரிபொருள் களஞ்சியப்படுத்தப்படுகின்றது. எனினும் எண்ணெய் களஞ்சியசாலைகளை வேறு எவருக்கும் குத்தகைக்கு கொடுக்கவோ அல்லது தனியார் மயப்படுத்தும் எந்தவொரு நோக்கமும் எமக்கு இல்லை. 

அதேபோல் வலுசக்தி அமைச்சர் என்ற வகையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை சீனாவுக்கோ அல்லது வேறு எந்தவொரு நாடுகளுக்கோ வழங்குவது குறித்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கவில்லை என்பதை உறுதியாக கூற முடியும் என்றார்.

No comments:

Post a Comment