சுதந்திர கட்சி விரும்பினால் அரசாங்கத்திலிருந்து தாராளமாக வெளியேறலாம், எவரும் தடையில்லை : திலும் அமுனுகம - News View

About Us

About Us

Breaking

Sunday, July 11, 2021

சுதந்திர கட்சி விரும்பினால் அரசாங்கத்திலிருந்து தாராளமாக வெளியேறலாம், எவரும் தடையில்லை : திலும் அமுனுகம

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரனமுன கூட்டணியில் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வெளியேறுவதால் அரசாங்கத்தின் இருப்பிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் இடம்பெற்று முடிந்த பொதுத் தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிட்டதாலேயே மக்களின் ஆதரவை பெற்றார்கள் என போக்குவரத்து மற்றும் சமுதாய பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் இருந்து சுதந்தி கட்சி வெளியேறுவதால் அரசாங்கத்தின் இருப்பிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஆளும் தரப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாகவே உள்ளார்கள்.

2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் சுதந்திர கட்சி பொதுஜன பெரமுன தலைமையிலான தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிட்டது. இதன் காரணமாகவே அவர்களுக்கு இரண்டு மூன்று ஆசனங்கள் கிடைக்கப் பெற்றது. தனித்து சென்றிருந்தால் 2018 ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கிடைக்கப் பெற்ற பெறுபேறுகளே சுதந்திர கட்சிக்கு கிடைக்கப் பெற்றிருக்கும்.

வேறு கட்சி என்ற அடிப்படையில் சுதந்திர கட்சி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க முடியும். விரும்பினால் அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்பட முடியும், விரும்பாவிடின் அரசாங்கத்தில் இருந்து தாராளமாக வெளியேற முடியும். எவரும் தடை விதிக்கவில்லை. இருப்பதாலும், வெளியேறுவதாலும் எவ்வித மாற்றமும் ஏற்படாது. ஏனெனில் சுதந்திர கட்சியின் குறைந்த பட்ச உறுப்பினர்களே பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிக்கிறார்கள்.

அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. கடந்த காலங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து வெளியேறியே அரசாங்கத்திற்கு எதிராக போராடினோம். அதனை போன்று சுதந்திர கட்சியும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி போராடலாம் என்றார்.

No comments:

Post a Comment