(இராஜதுரை ஹஷான்)
நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் அரசாங்கம் அரசியல் செயற்பாடுகளை விடுத்து நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாச தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர் மக்களுக்கு நிவாரணம் வழங்குவார். என ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் ஊடகங்களில் குறிப்பிட்டார்கள். இதனை பேச்சளவில் மாத்திரம் குறிப்பிடாமல் செயலளவில் செயற்படுத்த வேண்டும்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை, கட்சியின் எதிர்கால செயற்பாடுகள், எதிர்வரும் காலங்களில் இடம் பெறவுள்ள தேர்தல்களில் கட்சி என்ற ரீதியில் போட்டியிடல், கட்சி மறுசீரமைப்பு உள்ளிட்ட காரணிகள் குறித்து மத்திய செயற்குழு கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.
அத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவின் கூட்டணியின் பங்காளி கட்சி உறுப்பினர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களினால் புறக்கணிப்படுவது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பங்காளி கட்சிகளை புறக்கணித்து கூட்டணியாக ஒன்றிணைந்து செயற்பட முடியாது.
நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துவதை விடுத்து அரசியல் காரணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. பொருளாதார ரீதியில் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முறையான திட்டங்கள் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை.
No comments:
Post a Comment