(இராஜதுரை ஹஷான்)
கொவிட்-19 தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளல் மற்றும் இதர தேவைகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆடிகல மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிட பணிப்பாளர் ஷென் ஷென் ஆகியோர் இன்று சனிக்கிழமை நிதியமைச்சில் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்கள்.
ஆசிய - பசுபிக் தடுப்பூசி பெறுகை இலகுப்படுத்தல் செயற்திட்டத்தின் கீழ் 84 மில்லியன் அமெரிக்க டொலரும், நிலையான தேசிய மானியத்தின் ஊடாக 66 மில்லியனும் இத்திட்டத்தின் ஊடாக கிடைக்கப் பெறுகின்றதாக நிதிமைச்சு அறிவித்துள்ளது.
கொவிட்-19 தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளல், களஞ்சியப்படுத்தல், மற்றும் விநியோகித்தல் உள்ளிட்ட விடயங்களுக்காக இந்நிதி செலவிடப்படவுள்ளது.
மொத்த செயற்திட்டத்திற்கான செலவு 161.85 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 11.85 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்த அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தல், வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் வீதத்தை கட்டுப்படுத்தல், பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் திட்டங்களை செயற்படுத்தல், சுகாதார சேவை கட்டமைப்பை மறுசீரமைத்தல் உள்ளிட்ட காரணிகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment