(இராஜதுரை ஹஷான்)
2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேற்றை வெகுவிரைவில் வெளியிட எதிர்பார்த்துள்ளோம். செயற்பாட்டு பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் ஒரு வார காலத்திற்குள் உறுதியான தீர்மானத்தை பரீட்சைகள் திணைக்களத்திற்கு வழங்குவார் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற 2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரன தர பரீட்சை பெறுபேறு வெளியாகும் தினம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், 2020 ஆம் ஆண்டு கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் தேசிய பரீட்சைகளை வெற்றிகரமான முறையில் நடத்தி முடித்துள்ளோம்.
கடந்த வருடம் இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு வழமைக்கு மாறாக விரைவாகவே வெளியிடப்பட்டது. உயர்தரப் பரீட்சை பெறுபேறும் நெருக்கடியான சூழ்நிலையில் வெளியிடப்பட்டது.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக 2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரன தரப் பரீட்சை உரிய காலத்தில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது சிறந்த திட்டமிடலுக்கு அமைய சாதாரன தரப் பரீட்சை கடந்த மார்ச் மாதம் முதலாம் முதலிரண்டு வாரத்தில் இடம்பெற்றது. பரீட்சையின் பெறுபேற்றை ஜூன் மாதம் வெளியிட ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டது.
புதுவருட கொவிட் கொத்தணி கடந்த காலங்களை காட்டிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாடசாலை மற்றும் பரீட்சைகள் திணைக்கள செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டன. சாதாரன தரப் பரீட்சையின் எழுத்து மூல வினா பத்திரங்கள் திருத்தும் பணிகள் முழுமையாக நிறைவுபெற்று அவை தரவுபடுத்தப்பட்டுள்ளன.
சாதாரண தரப் பரீட்சையின் செயற்பாட்டு பரீட்சையின் புள்ளிகளை தரவுபடுத்துவது மாத்திரமே மிகுதியாகவுள்ளது. செயற்பாட்டு பரீட்சையை நடத்துவது குறித்து கல்வி அமைச்சுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். செயற்பாட்டு பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் ஒரு வாரத்திற்குள் உறுதியான தீர்மானத்தை வழங்குவார் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment