சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குடும்ப உறுப்பினர்கள் சகிதம் இன்று (04.07.2021) முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட நிலையில் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்றையதினம் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வழிபாடு ஒன்றை மேற்கொள்வதற்காக தனிப்பட்ட விஜயமாக காலை 11 மணியளவில் ஆலயத்துக்கு வருகை தந்து சிறப்பு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் செய்தி அறிக்கையிடலுக்காக சென்ற ஊடகவியலாளர்களிடம் பொலிஸார் மூலம் வேண்டுகோள் விடுத்த அமைச்சர் குறித்த தனது பயணம் தனிப்பட்ட பயணம் ஆகையால் இந்த இடத்தில் செய்தி சேகரிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
அண்மையில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்த அமைச்சர் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த நேர்த்தி கடனை தீர்க்கும் முகமாக இன்று ஆலய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வருகை தந்ததாக அறிய முடிகின்றது.
இதனை தொடர்ந்து குறித்த இடத்தில் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக நின்ற நிலையில் பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆலயத்தின் பின் வாசல் வழியாக அமைச்சர் வாகனத்தில் ஏறி புறப்பட்டு சென்றுள்ளார்.
அமைச்சரின் வருகையை முன்னிட்டு ஆலய முன் பகுதியில் இராணுவத்தினரால் இளைப்பாறும் பந்தல் அமைக்கப்பட்டு சிற்றுண்டிகள் தயார்ப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இறுதியில் அந்த இடத்துக்கு அமைச்சர் வருகை தரவில்லை என்பதும் குறிப்பிட தக்கது.
No comments:
Post a Comment