செந்தில் தொண்டமானின் அதிரடி தலையீட்டால் இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்திற்கு புதிதாக 5 ஏக்கர் காணி ஒதுக்கீடு! - News View

About Us

About Us

Breaking

Saturday, July 3, 2021

செந்தில் தொண்டமானின் அதிரடி தலையீட்டால் இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்திற்கு புதிதாக 5 ஏக்கர் காணி ஒதுக்கீடு!

இயற்கை அனர்த்தங்களினால் பாதிப்புக்குள்ளாகிய இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தின் பாடசாலை கட்டடத்தை மீள் நிர்மானம் செய்வதற்கு மாற்று காணியை பெற்றுக் கொள்ள முடியாத இக்கட்டான சூழல் நிலவி வந்த நிலையில், 5 ஏக்கர் காணியை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் பெற்றுக் கொடுத்துள்ளார்.

கடந்த 03 வருடங்களாக இயற்கை அனர்த்தத்தினால் இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயம் தொடர்ச்சியாக பாதிப்புக்குள்ளாகியதுடன், மாணவர்களும் கல்விச் செயற்பாடுகளை தொடர முடியாது கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே இருந்தது வந்துள்ளனர்.

பாடசாலைக்கு கட்டிடத்தை மீள் நிர்மானம் செய்வதற்கு புதிய காணியொன்றை பெற்றுக் கொள்வதற்கு பாடசாலை நிர்வாகம் கடந்த மூன்று வருடங்களாக கல்வி அமைச்சு மற்றும் உயர்மட்ட அரச அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் எவ்வித தீர்வையும் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமையே காணப்பட்டது.

இந்த விடயத்தை மாவட்டத்தின் அரசியல்வாதிகளிடம் கூறியும் எவரும் கண்டுகொள்ளாத நிலை தொடர்ந்த போது, பாடசாலையின் அதிபர் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் ஆகியோர் சூம் (zoom) தொழில்நுட்பத்தின் ஊடாக செந்தில் தொண்டமானை தொடர்பு கொண்டு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை குறித்தும், நீண்ட நாட்களாக நிலவி வரும் காணி பிரச்சினை குறித்தும் கவனத்திற்கும் கொண்டு வந்ததை தொடர்ந்து, செந்தில் தொண்டமான் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின் பிரகாரம், பாடசாலை அதிபரின் கோரிக்கை ஏற்ப இரத்தினபுரி புதிய நகரத்தினை அண்மித்த பாம்கார்டன் தோட்டத்தின் வெரழுப்ப பிரதேசத்தில் அமைந்துள்ள ஐந்து ஏக்கர் காணியினை பாடசாலைக்கு வழங்குவதற்கான ஆவணம் பலாங்கொடை பெருந்தோட்ட நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியினால், செந்தில் தொண்டமான் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதுவரை காலமும் பெருந்தோட்ட பகுதிகளில் பாடசாலைகளுக்கு 2 ஏக்கர் காணி மாத்திரம் வழங்கப்பட்டு வந்த நிலையில் வரலாற்று சாதனையாக 5 ஏக்கர் காணியை பாடசாலைக்கு பெற்றுத் தந்தமைக்காக பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரும் செந்தில் தொண்டமானிற்கு நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment