யாழ். மாவட்டத்தில் நீர்ப்பாசன பிரதி இராஜாங்க அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட கிராமிய வயல்கள் மற்றும் அதுசார்ந்த குளங்கள், நீர்த் தேக்கங்கள் ஆகிய அபிவிருத்தித் திட்டங்களில் 50 வீதம் நிறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அனுராதா ஜெயரட்ன கலந்துகொண்டார். இங்கு வைத்தே இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த அமைச்சினால் வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் குளங்கள் மற்றும் வாய்க்கால்கள் புனரமைப்பு என 8 வேலைத் திட்டங்களுக்காக 50 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் 4 வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
ஆழங்குளம், முதலியார் குளம், பினாக்கன் குளம், மற்றும் வழுக்கி ஆறு புனரமைப்பு போன்ற அபிவிருத்தித் திட்டங்கள் 50 வீதத்தை எட்டியுள்ளதாக சுட்டி காட்டப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அமைச்சர், தற்போதைய அரசாங்கமானது நீர்ப்பாசன கிராமிய அபிவிருத்தி அமைச்சுக்கு பல கோடி ரூபா நிதியினை ஒதுக்கி உள்ளதாகவும் குறித்த நிதியினை வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கு தாம் அதிகளவில் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஏற்கனவே வட மாகாணத்தில் பல குளங்கள் புனரமைப்பு செய்ததற்கான முன்னேற்பாடுகள் இடம்பெற்று வரும் நிலையில் எதிர்வரும் மாத இறுதிக்குள் பெரும்பாலான குளங்கள் தூர்வாரப்பட்டு விவசாயிகளுக்குரிய நீர் தேவையினை வடக்கு மாகாணத்தில் பூர்த்தி செய்வதற்குரிய அனைத்து வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், உதவி அரசாங்க அதிபர் ம.பிரதீபன், வடமாகாண நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் வி. பிறேம்குமார், யாழ் மாவட்ட கமநல சேவைகள் ஆணையாளர் எஸ் நிஷாந்தன், யாழ் மாவட்ட உதவி விவசாய பணிப்பாளர் திருமதி. கைலேஸ்வரன் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோப்பாய் நிருபர்
No comments:
Post a Comment