அமைச்சுப் பதவி இல்லாமல் போவது குறித்து நான் கவலைப்படப் போவதில்லை : நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறுமா இல்லையா 20 ஆம் திகதி தெரிய வரும் - உதய கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Sunday, July 11, 2021

அமைச்சுப் பதவி இல்லாமல் போவது குறித்து நான் கவலைப்படப் போவதில்லை : நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறுமா இல்லையா 20 ஆம் திகதி தெரிய வரும் - உதய கம்மன்பில

(எம்.ஆர்..எம்.வசீம்)

எனது அமைச்சுப் பதவியை மீள பெற்றுக் கொள்ள அல்லது மாற்றியமைக்க ஜனாதிபதிக்கு பூரண அதிகாரம் இருக்கி்ன்றது. அது தொடர்பில் நான் கவலைப்படுவதும் இல்லை. ஏனெனில் அமைச்சுப் பதவியுடன் நான் அரசாங்கத்துக்கு வரவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறுமா இல்லையா என்பதை 20 ஆம் திகதி அறிந்து கொள்ளலாம் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

ஹங்வெல்ல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பிரதமரின் பரிந்துரைக்கமைய ஜனாதிபதிக்கு எந்தவொரு அமைச்சுப் பதவியையும் மீள பெறவும் முடியும் அதனை மாற்றியமைக்கவும் முடியும். அந்த வகையில் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் அமைச்சுப் பதவியை என்னிடமிருந்து பெற்று வேறு யாருக்காவது வழங்குவதற்கு தீர்மானித்தால் அதற்கு நான் தயார்.

ஏனெனில் நான் அமைச்சுப் பதவியுடன் அரசாங்கத்துக்கு வரவில்லை. அதனால் எப்போது வேண்டுமானாலும் அதனை வழங்கி விட்டுத்தான் செல்ல வேண்டும். நான் செய்த நன்மைகளைத் தவிர எதனை எடுத்துக் கொண்டு செல்ல முடியாது.

மேலும் எரிபொருட்களின் விலை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. நான் அமைச்சரவைக்கு தெரிவித்ததால்தான் விலை அதிகரிப்பு இடம்பெற்றதாக அரசாங்கத்தில் இருந்து யாரும் தெரிவித்ததாக எனக்கு தெரியாது. அவ்வாறு யாரும் தெரிவித்திருந்தால், அது தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். ஏனெனில் அரசாங்கத்தை நடத்துவது நான் அல்ல. மாறாக ஜனாதிபதியும் அமைச்சரவையுமாகும் என்றே இதுவரை நான் நினைத்துக் கொண்டிருக்கின்றேன்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி எனக்கு எதிராக கொண்டு வந்திருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முகம்கொடுக்க நான் தயாராகவே இருக்கின்றேன்.

பசில் ராஜாபக்ஷ் எனக்கு ஆதரவாக வாக்களிப்பாரா இல்லை என்ற நம்பிக்கையில்லாத எதிர்கால விடயங்கள் தொடர்பில் எனக்கு தெரியாது. என்றாலும் அதில் வெற்றி பெறுமா இல்லையா என்பதை 20ஆம் திகதி மாலை இடம்பெறும் வாக்களிப்பில் தெரிய வரும். அதுவரை சற்று பொறுமையாக இருங்கள் என்றார்

No comments:

Post a Comment