கைவிடப்பட்ட 2000 ஏக்கர் வயல் நிலங்களை எல்லையிட்டு விடுவிப்பதற்கு வன வளத் திணைக்களம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கு.திலீபன் தெரிவித்தார்.
வன வள திணைக்களத்தினர் வசமுள்ள பொதுமக்களுக்கான காணிகள் தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இதன்போது ஒரு மாத காலத்திற்குள் விடுவிக்கப்படவேண்டிய மேலதிக அரச காடுகளின் பட்டியல் ஒன்று வனவளத் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டதுடன், 2000 ஏக்கர் கைவிடப்பட்ட வயல் நிலங்கள் தொடர்பாக கமநலசேவை திணைக்களமும், வன வள திணைக்களத்தினரும் இணைந்து எல்லைகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கையினை உடன் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வெடிவைத்தகல்லு கிராமத்தின் காணிகள் இரண்டு வாரத்திற்குள் வனவளத் திணைக்களத்தால் விடுவிக்கப்படும். ஈச்சங்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குடியேற்றம் செய்வதற்குரிய இடத்தினை விடுவிப்பதாகவும் வன வள திணைக்களத்தினர் உறுதியளித்தனர்.
குறித்த கலந்துரையாடலில் வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், செட்டிகுளம் பிரதேச செயலாளர் பாபயோன், கமநலசேவை உதவி ஆணையாளர் விஸ்ணுகாந், வன வள திணைக்கள மாவட்ட அதிகாரி, மற்றும் வனவள உத்தியோகத்தர்கள், தென்னை பயிர்ச் செய்கை முகாமையாளர், பிரதேச செயலகங்களின் திட்டமிடல் பணிப்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
வவுனியா விசேட நிருபர்
No comments:
Post a Comment