ஆழ்கடலை நோக்கி இழுத்துச் செல்லப்படும், தீப்பிடித்த MV X-Press Pearl கப்பல் தற்போது கடலுக்குள் மூழ்கி வருவதாக, இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பிடித்த சிங்கப்பூருக்குச் சொந்தமான குறித்த கப்பலை, ஆழ்கடலை நோக்கி இழுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த உத்தரவுக்கமைய, இன்று (02) முற்பகல் அப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இலங்கை கடற்படையினரும் அக்கப்பலில் ஏறி அதற்கான பணிகளை முன்னெடுத்ததோடு, இலங்கை விமானப்படை அது தொடர்பான பணிகளுக்கு உதவியாக Bell 212 வகை ஹெலிகொப்டர் மூலம் வான் பரப்பில் அதனை கண்காணிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு உரிய பிரிவுக்கு அறிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குறித்த கப்பலின் பெரும்பாலான பகுதி தற்போது நீருக்குள் மூழ்கியுள்ளதளாக, இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
இதேவேளை, கப்பலிலிருந்து வீழ்ந்த மற்றும் வெளியாகி கடற்கரையை வந்தடைந்த கழிவுகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை, இலங்கை விமானப்படையினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment