சிறந்த திட்டமிடல் இல்லாதவாறு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது : பேராசிரியர் திஸ்ஸ விதாரன - News View

About Us

About Us

Breaking

Thursday, June 3, 2021

சிறந்த திட்டமிடல் இல்லாதவாறு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது : பேராசிரியர் திஸ்ஸ விதாரன

(இராஜதுரை ஹஷான்)

சிறந்த திட்டமிடல் ஏதும் இல்லாதவாறு கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக பொதுமக்கள் சாதாரண நாட்களில் நடமாடுவதை போன்றே வீதிகளில் நடமாடுகிறார்கள். இடைவெளி விட்டு கொவிட் வைரஸ் பரவலை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது. 14 நாட்கள் தொடர்ச்சியாக கடுமையான முறையில் நாட்டை முடக்கினால் மாத்திரமே ஒரு சிறந்த தீர்வை பெற முடியும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் , பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை தற்போது அமுலில் உள்ளது. பயணத்தடை அமுலில் உள்ள காலப்பகுதில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், தொற்றினால் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதே தவிர குறைவடையவில்லை.

சிறந்த திட்டமிடல் இல்லாத வகையில் தற்போது பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் பொருளாதார ரீதியில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள், அத்தியாவசிய தேவையினை நிறைவேற்றிக் கொள்வதில் பாரிய நெருக்கடிகளையும் எதிர்கொண்டுள்ளார்கள்.

அத்துடன் பயணத்தடை காலத்தில் பொதுமக்கள் குறிப்பாக கொழும்பில் பொதுமக்கள் சாதாரண நாட்களில் வீதிகளில் நடமாடுவதை போன்று நடமாடுகிறார்கள். இவ்வாறான நிலையில் பயணத்தடை அமுல்படுத்துவதால் எவ்வித நோக்கமும் கிடையாது.

புதுவருட கொவிட் கொத்தணி தோற்றம் பெற்றபோது நாட்டை 14 நாட்கள் முழுமையாக முடக்குவது அவசியம் என சுகாதார தரப்பினர் முன்வைத்த யோசனை புறக்கணிக்கப்பட்டது. ஓரிரு நாட்களுக்கு நாட்டை முடக்கி பிறகு பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான தடையை நீக்குவதால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது.

பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை முழுமையாக வழங்கி அதன் பின்னர் 14 நாட்களுக்கு கடுமையான முறையில் நாட்டை முடக்குவது சிறந்தாகவும், ஒரு தீர்வை பெற்றுக் கொள்வதாகவும் அமையும் இதனை விடுத்து இடைவெளி விட்டு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது.

அரசாங்கம் பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதுன், அவர்களின் வாழ்வாதாரம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்கள் சுகாதார ஆரோக்கியத்துடன் இருந்தால் மாத்திரமே பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். ஆகவே இவ்விடயத்தில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

தற்போதைய நிலையில் பொதுமக்கள் சுகாதார ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கொவிட் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் கொள்கை அனைத்து தரப்பினரையும் ஒன்றினைத்து வகுக்கப்பட வேண்டும். இவ்விடயத்தில் எதிர் தரப்பினரது ஆலோசனைகளையும் பெறுவது அவசியமாகும் என்றார்.

No comments:

Post a Comment