(இராஜதுரை ஹஷான்)
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு பேருந்து மற்றும் புகையிரதங்கள் நாளைமறுதினம் பொது போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்படமாட்டாது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை பொது போக்குவரத்து சேவை மாகாணங்களுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறும்.
போக்குவரத்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் ரஞ்சித் பண்டுக குறிப்பிடுகையில், அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் பேருந்து மற்றும் புகையிரதம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவையில் ஈடுப்பட்டுள்ளன.
பயணிகள் பேருந்தில் ஆசன எண்ணிக்கைக்கு அமைய பயணம் செய்வதற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைக்கு சமூகமளிப்பதற்கு போதுமான பேருந்துகள் சேவையில் ஈடுப்படுத்தப்படவில்லை என பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றதை அவதானிக்க முடிகிறது.
பயணத்தடை தளர்த்தப்படும் போது பின்பற்றப்பட வேண்டிய சுகாதார பாதுகாப்று அறிவுறுத்தல்களுக்கு அமையவே பேருந்துகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டன. ஆகவே அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்கள் தங்களின் நிறுவன பிரதானிகளின் பரிந்துரைகளுடன் அத்தியாவசிய பேருந்து சேவையை பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்கலாம்.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு நாளை இரவு 10 மணி தொடக்கம், வெள்ளிக்கிழமை காலை 4 மணி வரை நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்படுதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே நாளைமறுதினம் பேருந்துகள் பொது போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்பட மாட்டாது. வெள்ளிக்கிழமை மாகாணங்களுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பேருந்து போக்குவரத்து சேவை இடம் பெறும்.
புகையிரதங்கள் நாளைமறுதினம் பொது போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்பட மாட்டாது. புகையிரதத்தில் சமூக இடைவெளியை பேணுவது சாத்தியமற்றதாக உள்ளது.
இவ்விடயம் குறித்து சுகாதார தரப்பினருடன் பேச்சுவார்த்தையினை மேற்கொள்ளவுள்ளோம். வெள்ளிக்கிழமை புகையிரத சேவை மேல் மாகாணத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் முன்னெடுக்கப்படும் என புகையிரத திணைக்கள பதில் பொது முகாமையாளர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment