உகாண்டாவின் பணிகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் ஜெனரல் கட்டும்பா வாமலாவை இலக்கு வைத்து, அவர் பயணித்த கார் மீது துப்பாக்கி ஏந்தியவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதலில் ஜெனரல் கட்டும்பா வாமலா காயமடைந்தாகவும், அவரது மகள் துப்பாக்கி சூட்டு காயங்களுக்குள்ளாகி உயிரிழந்ததாகவும் இராணுவத்தினரும், அந்நாட்டு ஊடகங்களும் தகவல் வெளியிட்டுள்ளன.
நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணிக்குப் பிறகு கிசாசியில் உள்ள கிசோட்டா சாலையில் கட்டும்பா வாமலாவின் வாகனம் பயணித்துக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் சென்ற துப்பாக்கி தாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த கட்டும்பா வாமலா கிசாசியில் உள்ள மால்கம் சிகிச்சை நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த தாக்குதலில் கட்டும்பா வாமலாவின் வாகன சாரதியும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டும்பா வாமலா ஒரு உகாண்டா ஜெனரல் ஆவார், இவர் உகாண்டா அரசாங்கத்தில் பணி மற்றும் போக்குவரத்து அமைச்சராக 2019 டிசம்பர் 14 முதல் பணியாற்றியுள்ளார்.
அதற்கு முன், 2017 ஜனவரி 17 முதல் 2019 டிசம்பர் 14 வரை அவர் கட்டுமான அமைச்சராக பணியாற்றினார். அதற்கு முன்னதாக கட்டும்பா வாமலா உகாண்டா பாதுகாப்பு படைகளின் தலைவராக பணியாற்றியிருந்தார்.
No comments:
Post a Comment