எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் அனைத்து சிதைவுகளையும் ஆவணப்படுத்த நடவடிக்கை - கடலியல் விஞ்ஞானி கலாநிதி ஆஷா டி வோஸினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 2, 2021

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் அனைத்து சிதைவுகளையும் ஆவணப்படுத்த நடவடிக்கை - கடலியல் விஞ்ஞானி கலாநிதி ஆஷா டி வோஸினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

(நா.தனுஜா)

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் சிதைவுகள், கசிவடைந்துள்ள இரசாயனப் பொருட்களின் சிதைவுகள், கப்பலில் இருந்து வெளியேறியுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் என்பன தற்போது கரையொதுங்க ஆரம்பித்துள்ளன.

அவ்வாறு நாட்டின் பல்வேறு கரையோரப் பாகங்களிலும் கரையொதுங்கும் சிதைவுகளின் புகைப்படங்களைப் சேகரித்து, கடற்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் ஒத்துழைப்புடன் அவற்றை ஆவணப்படுத்தும் முயற்சி ஓஷன்ஸ் வெல் அமைப்பின் ஸ்தாபகரும் கடலியல் விஞ்ஞானியுமான கலாநிதி ஆஷா டி வோஸினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்புத் துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூடரமிடப்பட்ட எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் என்ற கொள்கலன் கப்பலில் கடந்த மேமாதம் 20 ஆம் திகதி ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, நேற்றைய தினம் அக்கப்பல் கடலில் மூழ்க ஆரம்பித்துள்ளது.

அதனால் நாட்டின் மேற்கு கடல் மற்றும் கரையோரப் பகுதி வெகுவாக மாசடைந்துள்ளதுடன் அக்கப்பலின் சிதைவுகள், கப்பலில் வைக்கப்பட்டிருந்த கொள்கலன்கள், அதிலிருந்து கசியும் இரசாயனப் பொருட்கள் மற்றும் எண்ணெய் என்பன ஏனைய கடல் மற்றும் கரையோரப் பிராந்தியங்களுக்கும் பரவலாம் என்று சூழலியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் நாட்டின் பல்வேறு கரையோரப் பகுதிகளிலும் கரையொதுங்கும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் சிதைவுகள் மற்றும் பிளாஸ்டிக் சிதைவுகளின் புகைப்படங்களை சேகரிப்பதற்கான செயற்றிட்டமொன்று ஓஷன்ஸ் வெல் அமைப்பின் ஸ்தாபகரும் இலங்கை கடலியல் விஞ்ஞானியுமான கலாநிதி ஆஷா டி வோஸினால் கடந்த மேமாதம் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

அதன்படி தமது வீடுகளை அண்மித்த கரையோரங்களில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் சிதைவுகள் அல்லது அதிலிருந்து வெளியாகும் திரவங்கள் மற்றம் பிளாஸ்டிக் பொருட்கள் என்பன கரையொதுங்கினால் அவற்றைப் புகைப்படம் எடுத்து, அதனை info@oceanswell.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட காணொளியின் ஊடாக ஆஷா டி வோஸ் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதனுடன் குறித்த புகைப்படம் எங்கே, எப்போது, யாரால் எடுக்கப்பட்டது என்பதையும் குறிப்பிடுமாறு வலியுறுத்தியிருந்தார்.

இத்தகைய புகைப்படங்களை சேகரிப்பதென்பது இலங்கையின் கடற்பாதுகாப்பு தொடர்பான ஆவணப்படுத்தலுக்கு இன்றியமையாதது என்று குறிப்பிட்ட அவர், இதன் மூலம் கடற்பிராந்தியம் ஆரம்பத்தில் நிலையையும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயினால் உருவான மாசடைவுகளையும் அனைத்தும் பழைய நிலைக்குத் திரும்பியதன் பின்னர் உள்ள நிலையையும் மிகச்சரியாக ஒப்பீடுசெய்யமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஓஷன்ஸ் வெல் அமைப்பினால் சேகரிக்கப்படும் இந்தப் புகைப்படங்கள் ஆவணப்படுத்தல் நோக்கத்திற்காக கடற்சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

'ஹிக்கடுவ கடலோரப் பகுதியில் மூன்று தினங்களுக்கு முன்னர் இறந்த ஆமையொன்று கரையொதுங்கியது. அது எவ்வாறு இறந்தது என்ற உண்மை எமக்குத் தெரியாது. அதன் இறப்பதற்குக் காரணமாக அமைந்திருக்கக் கூடிய வெளிப்படையான ஆதாரங்கள் எவையும் கண்டறியப்படவில்லை. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் வைக்கப்பட்டிருந்த கொள்கலன்களில் கசிவு ஏற்படத் தொடங்கியதன் பின்னரே குறித்த இறந்த ஆமை கரையொதுங்கியுள்ளது.

எனினும் அந்தக் கசிவு ஆமை இறப்பதற்கு காரணமாக அமைந்திருக்குமா? என்பதையும் உறுதியாகக்கூற முடியாது. எனவே இவ்வாறு கரையொதுங்கும் இறந்த கடல்வாழ் உயிரினங்களை விஞ்ஞான ரீதியான ஆய்விற்கு உட்படுத்துவதற்கும் அவை இறந்தமைக்கான காரணத்தைக் கண்டறிவதற்கும் பல்வேறு பாகங்களிலும் இருந்து அனுப்பப்படும் புகைப்படங்கள் உதவியாக அமையும்' என்று ஓஷன்ஸ் வெல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment