நைஜீரியாவில் அந்நாட்டு ஜனாதிபதி பதிவிட்ட ட்வீட்டை விதிகளை மீறிய இடுகை எனக்கூறி ட்விட்டர் நிறுவனம் நீக்கியதையடுத்து அந்த சமூக ஊடகத்துக்கு தடை விதித்துள்ளது நைஜீரிய அரசு.
இந்த நடவடிக்கையை அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார். அந்த நிறுவனமே தீமையாக இருக்கும்போது நல்லது எது, கெட்டது என்பதை கூற அது யார்? என்று டிரம்ப் அறிக்கையொன்றில் கூறியுள்ளார்.
சுதந்திரமான, வெளிப்படையான கருத்துப் பகிர்வுக்கு அனுமதி மறுப்பதால் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் சமூக ஊடக தளங்களுக்கு உலகின் பிற நாடுகளும் தடை விதிக்க வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் இருந்தபோது அவரது பதவிக் காலத்தின் கடைசி நாட்களில் செனட் சபை இருந்த கேபிட்டல் ஹில் கட்டடத்தில் அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள்.
அப்போது அவர்களை தூண்டும் விதமாக டிரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளையும் காணொளிகளையும் ட்விட்டர் நிறுவனம் முடக்கியது. ஒரு கட்டத்தில் அவரது கணக்கை நிரந்தரமாக ட்விட்டர் நிறுவனம் முடக்கியது.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் உள்ளிட்டோரின் கணக்குகள் முடக்கப்பட்ட நடவடிக்கை குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்காவது நீடிக்கும் என்று ஃபேஸ்புக் கடந்த வாரம் கூறியிருந்தது.
No comments:
Post a Comment