தேர்தல் முறைமை மறுசீரமைப்புத் தொடர்பில் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க கால அவகாசம் : விசேட பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 22, 2021

தேர்தல் முறைமை மறுசீரமைப்புத் தொடர்பில் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க கால அவகாசம் : விசேட பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் தீர்மானம்

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பில் பொருத்தமான சீர்திருத்தங்கள் தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை ஜூலை 15ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும், தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கும் நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற குழு நேற்று (21) இதனைத் தீர்மானித்தது.

இதற்கமைய குறிப்பிட்ட தினத்துக்கு முன்னர் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு அக்குழுவின் தலைவர் சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

முன்மொழிவுகளை sec.pscelectionreforms2021@parliament.lk என்ற மின்னஞ்சல் முகவரியினூடாக அல்லது செயலாளர், பாராளுமன்ற விசேட குழு, இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிவைக்க முடியும்.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமைகளை மறுசீரமைப்பது தொடர்பான பாராளுமன்ற விசேட குழுவுக்கு இதுவரை 94 முன்மொழிவுகள் கிடைத்துள்ளதாக குழுவின் செயலாளரும், பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர இக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.

இக்கூட்டத்தில் அமைச்சர்களான நிமல் சிறிபால.டி.சில்வா, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பவித்திரா வன்னியாராச்சி, அலி சப்ரி ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர திஸாநாயக, கபீர் ஹாசிம், ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், எம்.ஏ.சுமந்திரன், மதுர விதாரன மற்றும் சாகர காரியவசம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

எதிர்வரும் தேர்தல்களை கலப்பு முறையின் கீழ் நடத்துவதற்கும் குழு இணக்கம் தெரிவித்தது. இந்தக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு உள்ளூராட்சி சபைகள், மகாண சபைகள் மற்றும் பாராளுமன்றத்துக்கான தேர்தல் முறைகளில் மாற்றங்களை மேற்கொள்வதுதொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவும் இங்கு இணக்கம் காணப்பட்டது. முன்மொழிவுகளை வழங்குபவர்களிடமிருந்து வாய்மொழிமூல சான்றுகளைப் பெற்றுக்கொள்ள குழு விரும்பினால் சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நேரத்தில் குழுவின் முன் ஆஜராகுமாறு அழைக்கப்படுவரென்றும் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment