கிளிநொச்சியில் இயங்கி வரும் ஆடைத் தொழிற்சாலைகளால் கொரோனா தொற்று : அமைச்சர் டக்ளஸ் மாவட்ட உயரதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடால் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 2, 2021

கிளிநொச்சியில் இயங்கி வரும் ஆடைத் தொழிற்சாலைகளால் கொரோனா தொற்று : அமைச்சர் டக்ளஸ் மாவட்ட உயரதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடால்

கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் ஆடைத் தொழிற்சாலைகளால் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதாகக் கூறப்பட்டு வரும் விடயம் தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்ட உயரதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடாலை இன்று மாலை நடாத்தினார்.

மாவட்டச் செயலாளர் றூபவதி கேதீஸ்வரன், பிராந்திய சுகாதார சேவைகள் மாவட்டப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சரவணபவன், இணைத் தலைவரின் இணைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான வை.தவநாதன், மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் ஆகியோரடன் குழு தொலைபேசி தொடர்பாடல் மூலம் இந்தக் கலந்துரையாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடாத்தினார்.

இதன்போது, ஆடைத் தொழிற்சாலையின் தற்போதைய கொவிட்-19 தொற்று நிலவரம் தொடர்பில் வைத்திய கலாநிதி சரவணபவன் அமைச்சருக்கு விளக்கிக் கூறினார்.

அங்குள்ள 3 ஆடைத் தொழிற்சாலைகளில் ஒரு தொழிற்சாலையிலேயே இதுவரையில் அதிகளவானோர் கொவிட்-19 தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த அவர், இதுவரையில் 172 பேர் அங்கு தொற்றுடன் இனங்காணப்பட்டிருப்பதுடன், 400 பேர் வரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இரண்டு பணி நேரமாக சுழற்சி முறையில் நடாத்தப்பட்டு வரும் தொழிற்சாலைப் பணிகளில், ஒரு பணி நேரத்தில் வேலை செய்தவர்கள் மத்தியிலேயே அதிகளவு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாகத் தெரிவத்த அவர், மற்றைய பணி நேரத்தில் பணியாற்றியவர்கள் ஓரளவுக்கு சுமுகமாகப் பணியைத் தொடர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இறுதியாகச் செய்யப்பட்ட தொற்றுப் பரிசோதனைகளில் தொற்றாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை என்றும், ஆடைத் தொழிற்சாலை தொற்றாளர்கள் மூலம் சமூக மட்டத்தில் தொற்றுப் பரவல் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் மேலும் விளக்கினார்.

ஆடைத் தொழிற்சாலையை மூட வேண்டும் என்று முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வினவியபோது பதிலளித்த மாவட்டச் செயலாளர் றூபவதி கேதீஸ்வரன்,

இன்றையதினம் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில், எந்தவொரு தொழிற்சாலை நடவடிக்கைகளையும் இடைநிறுத்த வேண்டாம் என்று பணிக்கப்பட்டதாகவும், நோய்த் தொற்றுள்ளவர்களை இனங்கண்டு தனிமைப்படுத்துவதன் மூலம் தொற்றுப் பரவல் தொடராமல் தொழிற்சாலைகளின் பணிகளைத் தொடருமாறு அவர் ஆலோசனை கூறியிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதேபோல், ஆடைத் தொழிற்சாலைத் தொற்றாளர்களால் பயணத்தடை கடுமையாக்கப்பட்ட சாந்தபுரம் கிராமத்து மக்களின் பிரச்சினைகள் குறித்து இணைப்பாளர் வை.தவநாதன் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுசென்றதுடன், கிளிநொச்சி மாவட்டத்திலேயே தங்கியிருந்து தொழில்களில் ஈடுபடுவோருக்கு வசதியாக உணவகமொன்றைத் திறந்து செயற்பட ஏற்பாடு செய்யுமாறும் கோரிக்கை விடுத்தார்.

அதேபோல், ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முன்தள பணியாளர்களர்களுக்கு தடுப்பூசி வழங்கலின்போது முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் தவநாதன் வேண்டுகொள் விடுத்தார்.

இதனையடுத்து. அம்மாச்சி உணவகத்தை அதற்கேற்ற வகையில் உணவை எடுத்துச் சென்று உண்ணும் ஏற்பாட்டுடன் செயற்பட ஒழுங்கு செய்யுமாறு மாவட்டச் செயலாளர் றூபதி கேதீஸ்வரனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக் கொண்டதுடன், தடுப்பூசி வழங்கல் விரைவில் கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார்.

No comments:

Post a Comment