(இராஜதுரை ஹஷான்)
கொழும்பு துறைமுக கடற்பரப்பில் தீ பரவல் விபத்துக்குள்ளான பேர்ல் கப்பலினால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு வழங்கும் நிவாரண நிதியை 5 ஆயிரம் ரூபாவிற்குள் மட்டுப்படுத்த வேண்டாம். முழுமையான நிவாரணத்தை வழங்க அரசாங்கம் சிறந்த திட்டத்தை வகுக்க வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள பேராயர் இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் போதே பேராயர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், இரசாயன பதார்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள கரையோர பிரதேசங்களை தூய்மைப்படுத்தி பாணந்துறை தொடக்கம் நீர்கொழும்பு வரையிலான கடற்பரப்பில் விதிக்கப்பட்டுள்ள மீன்பிடி தடையினை நீக்க வேண்டும்.
இக்கப்பல் விபத்து குறித்து துறைமுக விவகார அமைச்சு மற்றும் துறைமுக அதிகார சபை அதிகாரிகளின் கருத்து அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையினை வெளிப்படுத்தியுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளாகியுள்ள எக்பிரஸ் பேர்ல் கப்பல் நாட்டின் கடற்பரப்பிற்குள் நங்கூரமிடுதற்கு முன்னர் கப்பலில் ஏற்பட்ட பிரச்சினை குறித்து அறியவில்லை என துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளும், பொறுப்பான அமைச்சரும் குறிப்பிடுவது வேடிக்கையாகவுள்ளது.
தேசிய வளங்களை இல்லாதொழிக்க இவ்வாறான திட்டமிட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றனதா என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது.
கப்பலில் ஏற்பட்ட தீ பரவல் காரணமான கடற் சூழலும், கடல் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. பெறும் நட்டஈட்டினால் இவற்றை ஒருபோதும் ஈடு செய்ய முடியாது.
பிரச்சினை ஒன்று தோற்றம் பெறுவதற்கு முன்னர் அதனை தடுக்கும் செயற்திட்டங்களை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும் தற்போதைய அரசாங்கம் அதனை செயற்படுத்தவில்லை.
இக்கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினாலும், அரசாங்கத்தின் கவனயீனத்தினாலும் பாணந்துறை தொடக்கம் நீர்கொழும்பு வரையிலான கடற் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுப்படும் மீனவர்கள் மற்றும் மீனவ கைத்தொழிலுடன் தொடர்புடைய ஏனைய தொழிலாளர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
பொருளதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இவர்களுக்கு வழங்கும் நிவாரண தொகையினை வெறும் 5 ஆயிரத்திற்குள் மட்டுப்படுத்த வேண்டாம். முழுமையான நிவாரணத்தை வழங்க அரசாங்கம் உரிய நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment