(எம்.மனோசித்ரா)
ஸ்புட்னிக் தடுப்பூசியை முதற்கட்டமாக வழங்குவது மாத்திரம் போதுமானது என்று அதனை தயாரிக்கும் நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும் இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாகவே கண்டி மாவட்டத்தில் தடுப்பூசி பெறுபவர்களிடம் ஒரு தடுப்பூசியை பெற்றுக் கொள்ள இனக்கம் கோரப்பட்டது. மாறாக இரண்டாம் கட்ட தடுப்பூசியை வழங்க முடியாது என்று கூறவில்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் , தடுப்பூசியொன்றை பெற்றுக் கொள்ளும் போது படிவமொன்றை நிரப்பும் செயற்பாடு இலங்கையில் மாத்திரமல்ல சகல நாடுகளிலும் இடம்பெறுவதாகும். இது குறிப்பிட்டவொரு தடுப்பூசிக்கு வழங்குவது மாத்திமல்ல. தடுப்பூசியைப் பெற்றுக் கொள்பவர்கள் அதற்கான கையெழுத்திட வேண்டியது நியதியாகும். இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் அறிமுக்கப்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளுக்கமையவே இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கண்டி மாவட்டத்தில் ஸ்புட்னிக் தடுப்பூசியை வழங்கும் போது கையெழுத்து பெற்றுக் கொள்ளப்பட்ட ஆவணத்தில் இடப்பட்ட இறப்பர் முத்திரையே தற்போது சர்ச்சைக்குரிய பேசுபொருளாகியுள்ளது.
கடந்த வாரம் 50000 ஸ்புனிக் தடுப்பூசிகள் எமக்கு கிடைக்கப் பெற்றன. எனினும் அடுத்த கட்டமாக தடுப்பூசி வழங்கும் தினம் குறித்து தயாரிப்பு நிறுவனம் ஸ்திரமாக இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் ஸ்புட்னிக் தடுப்பூசியை முதற்கட்டமாக மாத்திரம் வழங்குவது போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக் லைக் என்று இந்த தடுப்பூசிக்கு பெயரிடப்பட்டுள்ளது.
எனவே எமக்கு கிடைக்கப் பெற்ற 50000 தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்காமல் களஞ்சிப்படுத்துவதா அல்லது வழங்குவதா என்று தீர்மானிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்த தீர்மானத்தை எடுப்பதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் விசேட நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இக்குழுவில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.ஆனோல், உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கையின் செயற்திட்டங்களுக்கான பிரதிநிதி வைத்தியர் நாலிகா குணவர்தன, தொற்று நோயியல் நிபுணர் ஹசித திசேரா, நோய் எதிர்ப்பு தொடர்பான விசேட நிபுணர்களான பேராசிரியர் நீலிகா மலவிகே மற்றும் டி.தஸநாயக்க ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
இந்த குழுவே 50000 தடுப்பூசிகளையும் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. அதேபோன்று எதிர்வரும் தினங்களில் குறித்த தடுப்பூசி நிறுவனத்தின் ஆய்வுகூடத்தினால , ஒரு தடுப்பூசி மாத்திரம் வழங்கினால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டால் அதற்கு எம்மிடம் ஏதேனுமொரு தயார்நிலை இருக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment