தெல்லிப்பழையில் வீட்டில் தனித்திருந்த மூதாட்டியை கொலை செய்து, நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவத்தில் இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மானிப்பாய் பகுதியில் வைத்து அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
25 வயதுடைய அவர் இரண்டு ஆண்டுகளாக புங்குடுதீவில் தலைமறைவாகியிருந்த நிலையில், மானிப்பாய்க்கு சென்றிருந்த நிலையில் காங்கேசன்துறை பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான அணியினர் குறித்த நபரை கைது செய்தனர்.
தெல்லிப்பழை மகாதனையைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கமலாதேவி (வயது -70) என்ற மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் 2019ஆம் ஆண்டு மே 6 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.
மூதாட்டி அணிந்திருந்த நகை மற்றும் வீட்டிலிருந்த பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன என்று உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.
சம்பவத்தையடுத்து 5 பேர் கைது செய்யப்பட்டனர். 6 ஆவது சந்தேகநபர் தலைமறைவாகியிருந்தார். இந்த நிலையில் 6ஆவது சந்தேக நபர் 2 ஆண்டுகளின் பின் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூதாட்டி கொலை செய்யப்பட்டபோது நான் அவரது காலை பிடித்து வைத்திருந்தேன். என்னை இரண்டு ஆண்டுகள் தலைமறைவாகியிருக்குமாறு மற்றவர்கள் கூறினர். பொலிஸார் மறந்த பின்னர் வீட்டுக்கு வருமாறும் தெரிவித்திருந்தனர் என்று சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
No comments:
Post a Comment